Friday, June 25, 2010

ராவணன்! மணிரத்னத்தின் வன வாசம்!













பல வருடங்களுக்கு பின் மணிரத்னம் வருகிறார் என்ற எதிர்பார்ப்புடன்      இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். வனத்திற்குள் வாசம் செய்து படம் முழுக்க முடித்து விடுகிறார். திரைப்படக் கலையின் தொழில் சிறப்பை ஆயுதமாக வைத்து தன் படைப்பின் ப்ரமிப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தாலும் கதைக்களம் சாதாரணமான ஒன்று என்ற வகையில்  இம்முயற்சியின் பரிமளிப்பு கொஞ்சம் சோடை போவது போல் ஒரு உணர்வு.

 ஒரு பார்வையாளனாக படத்தின் ஆரம்பத்தில் காட்சி கோர்ப்புகளை உள்வாங்கி ஒருங்கிணைக்க சற்று சிரமமாக இருந்தது.

காட்சிகள், காட்சியமைப்பின் கடின உழைப்பு, படப்பிடிப்பு நடத்திய இடங்கள், நேரம், ஒளி ஓவியர்களின் திறம், மற்ற கலைஞர்களின் ஒத்துழைப்பு என்று, ராவணன் ஒரு தரமான முயற்சியைத் தருவதை நான் உணர்ந்தாலும்,  ஒரு இயக்குனர் என்ற முறையில் மணி அவர்கள் ஏன் இந்தக் கதையில் நாட்டம் கொண்டார் என்று அலச முயன்ற போது, ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது.

திரையுலகில் இயக்குனர்களாய் பவணி வந்து கொண்டு இருக்கும் பலரின் மனதிலும் ஏற்படக்கூடிய போலிஸ் அராஜகம் என்ற சிந்தனைதான் ராவணனின் மூலக்கரு. வியாபார அடிப்படையில் மணிரத்னத்தின் முந்தைய படங்கள் ஏமாற்றம் அளித்த்து என்ற பின்ணணியில் ராவணனின் வெற்றிக்கு ஏற்படுத்தப்பட்ட யுக்தியாய் கதையின் பாங்கு தோன்றியது.

வீராவாக வரும் விக்ரம் எப்படி ராவணனாக இயக்குனரின் பார்வையில் வருகிறார் என்று எண்ணினால் எஸ்.பி யாக வரும் ப்ருத்வி ராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயைக் கடத்தி அவரின் அழகில் மயங்கும் ஒரு பாத்திரமாக விக்ரம் புணைக்கப்பட்ட விதம் என்ற அடிப்படைதான்.

14 வருட வனவாசம் என்ற ராமாயணம். 14 நாட்கள் (Miniature Version) சிறை பட்டிருந்த நமது சீதாவாக ஐஸ்வர்யா. ப்ருத்விராஜ் ராமன் வேஷத்திற்கு பொருத்தமானவர் ஆனால் ஒரு போலிஸ் அதிகாரியாக ராமனின் குணநலம் மற்றும் மணுதர்மம் இல்லாதவராய் இருந்தார். மணி ரத்ணம் அந்த சில நல்ல குணங்களில் சிறிதை ராவணனாய் வரும் விக்ரமிற்கு கொடுத்து விட்டார்.

அழகின் சபலம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தை,  பலதரப்பட்ட சொல், செயல் தர்மங்களை காக்கும் கதா நாயகனான விக்ரமிற்கு, ஒரு மணமான பெண்ணிடம் வருவது 21 ஆம் நூற்றாண்டின் விதி விலக்கா என்று கேட்கத் தோன்றுகிறது.  விக்ரமிற்கு வரும் அந்தக் காதலை மிகவும் அதிகம் காட்டி மக்களிடமோ, குறிப்பாக பெண்களிடமோ வம்பை விலைக்கு வாங்கி அதில் ஏதேனும் தடங்கல் செய்யவே சில கூட்டம் அலையும் என்ற ஐயம் மணி அவர்களைக் கொஞ்சம் ஜஹா வாங்க வைத்தது போலவும் அவர் மந்திரி சபையின்  வியாபார நோக்குமாகவும் வியூகமாகவும் தெரிகிறது.


 சில நாட்களே நடக்கும் இந்த கதைக்களத்தில் சில இடங்களில் ஓட்டைகள் இல்லாமல் இல்லை. இயல்பு மீறிய நடப்புகளை தம் வசதிக்காக (மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று) லாவகமாக இணைத்து முயற்சி செய்தாலும் கதையுடன் அந்நிகழ்வுகள் ஒட்டாமல் பிரிவது ஒரு சிறு தொய்வையும் ஏற்படுத்துகிறது.  பக்பக்கென்று மன நோயாளி போல் பேசும் விக்ரம், சாகும் தருவாயில் பயம் போக்கப் பாடும் ஐஸ்வர்யா என்ற சினிமா பூச்சுக்கள் சுதந்திரப் போராட்டகால சினிமாவை நினைவுறுத்துகிறது.

பாத்திரப் படைப்பில் இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருக்கலாம் என்று நான் எண்ணினேன். விக்ரம் பாத்திரப் படைப்பு மனதில் ஒட்டாமலேயே இருந்தது. ப்ருத்வி ராஜ் தோற்றம் ஒரு பெண்மைத் தனத்தைக் காட்டியது. ஐஸ்வர்யா ராய் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் ஏன் நடிக்கிறோம் என்று அவருக்கே தெரியாத மாதிரி சில நேரங்களில் தெரிகிறார்.

பிரமிப்பு என்ற ஒரு யுக்தியின் மூலம், காட்சிப் ப்ரயோகம் செய்வது பார்வையாளர்களை கொஞ்சம் திகைப்பில் ஆழ்த்தினாலும், கதையின் பாங்கு கொஞ்சம் வெற்றிடத்தையும் தொய்வையும் காட்டுகிறது.

ரஹ்மானின் இசை நன்றாகவே இருந்தது. கள்வரே பாடல் அருமை. படமாக்கிய விதம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

ராவணன், ஏன் அப்படி வாழ்ந்தான் என்று தெரிந்து கொள்ளும் நியாயத்தை தெரிந்து கொள்ளாத போலிஸின் வெறி.  ஒரு அதிகாரியின் மனைவியை கடத்தி வந்தமைக்காக கடைசியில் ராவணன் தன்னைக் காப்பாற்றியவன் என்று தெரிந்த பின்னும், கொல்லப்படும் போது குறி பார்த்து சுடும் ஒரு குண்டு இதயத்தில் பாய்ந்தால் போதாதா?  நம்ம சினிமாக்காரர்களுக்கு அப்போது தெறிக்கும் ரத்தத்தை ஐஸ்வர்யா முகத்தில் பட வைக்கத் தெரியாதா?
ராவணனை சிறு பிள்ளைகள் பொட்டு வெடி துப்பாக்கி வைத்து தீபாவளி அன்று சுடுவது போல் ஏன் மணி ரத்னம் சுட வைத்தார் என்று தெரியவில்லை. அப்பட்டமான சினிமாத்தனமாய் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது.

அதீத மெல்லசைவான (HIGH RATE SLOW MOTION) யுக்தியில்  திரைச்சுருளை ஓட்டி, நடிகர்களின் நடிப்பாலும், தன் காட்சி கோர்ப்பாலும் (MONTAGE) கடைசியில் உணர்வுகளை பரிமாறும் இடம் மனதில் தாக்கம் ஏற்படுத்தியது.

கையால் தொடாமல் ரத்தத்தின் மூலம் தன் காதலியைத் தொட்டுவிட்டு, கைகளை விரித்து தொட முயன்றவாறே, ஒரு பெரும் பள்ளத்தாக்கில் விழும் ராவணன்....

இன்னொருவன் மனைவியின் மீது வரும் அந்தக் காதல் கொச்சைப்படுத்தப் படாமல் அப்படியே போய் விட்டால் நல்லது என்று ராவணனை மட்டும் பள்ளத்தில் தள்ளிவிட்டு அப்படியே ப்ரமிப்புடன் திரையை இருட்டாக்கி மக்களை வெளியே அனுப்பிவிட்டார் மணிரத்னம்.

வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்று முயலும் ரகத்தில் மணிரத்னம்
குழுவினர்  எப்போதும் போல முயன்றதும் திரைப்படக் கலையின் மெருகுகளை கவனத்துடன் தர
முயன்று  வெற்றியும் பெற்றதற்கு பாராட்டினாலும், வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்ற அடிப்படையில், சில உள்ளங்களின் நல்ல ரசனையின் உதவியில், படைப்பாற்றலின் பக்க பலத்தில் தமிழ் திரையில் ஒரு வண்ணம் கூடப் பூசிய மசாலாவாகத்தான் ராவணன் தெரிகின்றான்.

Sunday, May 30, 2010

ஒரு இயக்குனரின் பிறப்பு...

உண்மையில் சொல்லப் போனால் நீங்களும் ஒரு இயக்குனரே! வாழ்வின் செயல்பாடுகளை செவ்வனே செய்யும் போது ஒரு நல்ல இயக்குனராகுகின்றீர்கள். அதே செயல் திறனை கற்பனையுடன் கலந்து, சினிமா என்ற ஒரு சாதனத்தின் சில வழிமுறைகளைக் கற்றுக் கொண்டால், வள்ளுவர் வாக்குப் படி "கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்ற பாங்கில் திரைப்பட இயக்குனராய் பவணி வரலாம்.

கம்ப சூத்திரம் கற்க இயலாதது இல்லை. முயற்சிதான் முக்கியம். இயக்குனராய் நாம் யார் வேண்டுமானாலும் எதையும் இயக்கலாம். ஆங்கிலத்தில் இயக்கம் என்பதை மூவ்மெண்ட் (movement) என்று சொல்லுவார்கள் அல்லவா? அதே பொருள்தான் இயக்குனரின் தொழிலும்.
ஒரு கதையின் நிகழ்வை சாதுர்யமாக காண்பவரின் ரசனையைத் தொடுமளவு எப்படி அவரால் இயக்க முடியும் என்பதே இயக்கம்.

உதாரணமா ஓர் காட்சி. நீங்க  ஒரு விசயத்தை பொய் சொல்லி மறைக்கப் பாக்கிறீங்கன்னு வச்சுக்குங்க. நீங்க என்ன செய்றீங்க?

ஒத்திகை பார்த்து சில சமயம் எதிர்பாராத திருப்பம் வரும்  போது லாவகமா சிந்திக்கிறீங்க, அதுக்கு ஏத்த மாதிரி இயங்குறீங்க அல்லவா அது ஒரு இயக்குனரின் தொழில் என்று வைத்துப் பார்க்கலாம். இது ஒரு அடிப்படை.

கொஞ்சம் மாற்றி, அணுகுமுறை என்ற விதிப்படி, கற்றல் அவசியம். ஒரு ஆர்வ அடிப்படை காதல்!

முக்கியமான விசயம் இயக்குனருக்கு சினிமாவின் உள்ளே இயங்கும் பலதரப்பட்ட தொழில் நுட்பங்கள், கலைகள் போன்றவற்றை ஒரளவேனும் அறிந்து கொள்ளும் அவசியமும், இந்த இத்யாதிகளை கையாள்கின்ற நேர்த்தியும் மிக அவசியமாகிறது.

ஒரு கதையை கேட்கும் போது நம் மனதினுள் நாமே ஒரு காட்சியை உருவாக்கிக் காண்கிறோம். கதை சொல்பவர் அதற்கிடையே அவரது கற்பனை வளம், மற்றும் சங்கீத ஞானம் போன்றவற்றின் அடிப்படையில் கதை சொல்லச் சொல்ல, நமது ஆர்வம் அதிகமாகும் தன்மை போல் இயக்குனர், ஒரு கதையை தனது பங்காளிகளான தொழில் நுட்பக் கலைஞர்களுடனும், பல கலைத்துறையின் ஆர்விகளுடனும் நிஜமாய் நடப்பது போல் உருவாக்க முயல்கிறார்.

கதை உயிர் பெற்று சினிமாவின் வழியே தத்ரூபமாக காட்சி தருகிறது. கதையின் அமைப்பு, காலகட்டம், நிகழ்வின் தண்மை போன்றவை இயக்குனரின் பார்வையில் தனித்தண்மை பெற்று பல கலைகளின் உதவியுடன் ஒரு இரு பரிமாணத் திரையில் முப்பரிமாண வாழ்வு போல் நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் ஒரு கிரியைதான் சினிமா.

எத்தனையோ வருடங்கள் நடந்த ஒரு விடயத்தை அல்லது ஒரு மணித்துளி மட்டும் நடக்கும் ஒரு விடயத்தை திரைக்கதையின் (Screen Play), வாயிலாய் சிந்தையைக் கவரும் வகையில் படமாக்கலாம்.

இயக்குனர் ஆகும் போதே, தனக்கு என்று ஒரு தனித்தண்மையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இயக்குனர்களுக்கு வேண்டும். (School of thought), சார்பு வழிப் பயிற்சி என்ற அடிப்படையில் ஒருவரிடம் உதவியாளராய் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் அவரது குருவின் சிந்தனை வழியைப் பின்பற்றி விடுதல் இயல்பு எனினும், சுயமாய் சிந்தித்து வித்தியாசத்தைக் காட்டும் சிறப்பு இயக்குனராய் வரவேண்டும் என்று கருவில் இருக்கும் சிசுவாய் இருக்கும் புது இயக்குனர்களுக்கு பொருந்த வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் செய்யும் பாங்கு அமைவது கடினம். என்னடா இவன், நீங்களும் இயக்குனர்தான் என்று சொல்கிறானே அது எப்படிச் சரியாகும் என்று ஒரு தாழ்வு மனப்பாண்மையுடன் உங்களைப் பார்க்க வேண்டாம். உண்மையில் முயற்சி திருவிணையாக்கும் என்ற சொல் எக்காலத்திற்கும் உரியது. நம்மில் பலர் முயல்வதை விட்டுவிட்டு, குறை சொல்வதற்கெனவே பிறந்திருக்கிறோம். ஆனால் ஒரு இயக்குனரின் பிறப்பு நல்ல முயற்சியில் அமைவதே.

நிறையப் படியுங்கள். புத்தகம் படிக்கவில்லை என்றால் வாழ்க்கையைப் படியுங்கள். ஒரு நிகழ்வின் தாக்கம் மனநிலையை எப்படிப் பாதிக்கிறது என்ற பக்குவத்தை உணர்வு பூர்வமாக உணருங்கள். எழுதிப் பழகுங்கள்.
ஒரு சாதாரண வீடியோ கேமராவை வைத்து ஒரு சிறு நிகழ்வையோ கதையையோ படமாக்குங்கள்.  வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள். உதாரணத்திற்கு, இசையில் ஆர்வம் உள்ள நண்பர், நடிப்பதில் ஆர்வம் உள்ளவர், கலையில் ஆர்வம் உள்ளவர், படத்தொகுப்பில் ஆர்வம் உள்ளவர் என மற்றவர் உதவியுடன் அக்கதையையோ நிகழ்வையோ மனதில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்க முயலும் முதல் முயற்சி நீங்கள் ஒரு இயக்குனராய்ப் பிறக்க வழி செய்யும்.

அத் திரை முயற்சியை எல்லாருக்கும் காட்டி அவர்களின் மனதில் எந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்று அறியுங்கள். அதன் மூலமே நீங்கள் உங்களின் செயல்திறனை மதிப்பிட முடியும். யாராவது சரியில்லை என்றாலும், உங்களுக்கே சரியாய் வரவில்லை எனத் தோன்றினாலும் மறுபடியும் முயலுங்கள்.

ஒரு இயக்குனர் முயற்சியில்தான் உருவாகுகிறார். ஒரு சாதாரண மனிதன் இயக்குனராய்ப் பிறக்க ரசனையும் பயிற்சியுமே தேவை!

ரெடி, ஸ்டார்ட் கேமரா, ஆக் ஷன், டேக் ஓகே என்று நீங்கள் சொல்லும் காலம் விரைவிலேயே வரலாம்.

Saturday, May 22, 2010

சுறா- பல் இல்லாமல்!

சுறா. விஜயின் அதிரடி கொஞ்சம் சக்தியற்றிருந்த ஒரு கமர்ஷியல் பட முயற்சி. கதை வழக்கமான கப்சா. வேற எதுவுமே சிந்திக்க தெரியாது என்ற விஷயத்தை மறுபடி ஒரு கதை மூலம் விளக்க முயன்றிருக்கிறார்கள்.  திரைக்கதையின் இயலாமையால், விஜய் படம் என்ற தன் வழக்கமான ஈர்ப்பை கொஞ்சம் இழந்து விடுகிறது

எவ்வளவு நாள் ஒரே மாதிரியான கதைகளை செய்வோம் என்று கேட்டால் இயக்குநர் மற்றும் கதாசிரியர், நம்மையே கேட்பார்கள், என்ன சார், எத்தனை நாள் இட்லி, சாம்பார் சாப்பிடுறீங்க என்று!

ஆனா நாங்க விடுற ஆளா? பக்குவம் இருக்குதுல்லண்ணே! என்று மதுரை தொனியில் அடிப்பமுல்ல.....

சுறா விஜய்-க்கு 50-வது படம் என்று எதிர்பார்ப்புடன் போனோம். மன்னிக்கனும் விஜய். உண்மையிலேயே கதையமைப்பு அந்த எதிர்பார்ப்பை வீணடித்து விட்டது. ஒரு சிறு மீனவ மக்களின் குப்பத்தில் வரும் குழப்பங்களை வைத்து கதை. அரசியல்வாதி, கதா நாயக எதிர்ப்பு, சண்டைக் காட்சிகள் என்று கதையை எடுத்து செல்லப் போராடுகையில், தமன்னாவின் செயற்கையான சினிமாத்தன அறிமுகம், நகைச்சுவையை மையமாக வைத்தாலும், அது சரியாக எடுபடவில்லை.  பாத்திரப் படைப்பின் அஸ்திவாரம் எந்த விதமான கதைக்கும் முக்கியம். விஜய் போன்ற வியாபார ஸ்திரம் கொண்ட நடிகர்களை வைத்து எடுக்கும் போது இன்னும் ஒரு 'நச்' வேணும். "அதாவது சும்மா நச்ன்னு இருக்கணும்ணே!"


நான் யாருடைய முயற்சியையும் குறை கூறவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தப் படத்தில் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு வழக்கமான கதையை வழக்கமான சிந்தனையுடன், வழக்கமான முறையில் படமாக்கி கொடுத்திருந்தனர்.

வடிவேல் காமெடி ட்ராக் கூட அவ்வளவு சூடு இல்லாமல் இருந்தது.

மற்ற தொழில் நுட்பக் கலைகளின் பங்கும் பரிமளிக்கவில்லை. பரவாயில்லை என்றே சொல்லலாம். விஜய், தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அவர்களுக்கு ஒரு பிரியத்தின் பேரில் கால்ஷீட் கொடுத்து இந்தக் கதைக்கு நடித்தாரா என்று ஒரு எண்ணம் கூட வருகிறது. இசையமப்பாளர் மணி சர்மாவின் பாடல்கள் கூட இதில் மிளிரவில்லை என்றே கூற வேண்டும்.

நண்பர் ராஜ்குமாரின் இயக்கம் அவர் கதையை உருவாக்கி, திரைகதையாய் மாற்றும் லாவகம்,  இன்னும் சிறப்பு பெற வேண்டும் என வேண்டுகிறேன்.

முயற்சியின் பக்குவம், திறன் போன்றவை எந்த தொழிலிலும் மிக மிக முக்கியம். திரைப்படத்திற்கு அது மிக மிக மிக முக்கியம். அதுவும் வியாபார ரீதியில் எடுக்கப் படும் படங்களுக்கு மிக, மிக, மிக, மிக,மிக முக்கியம். அது இல்லாதது சுறா பல்லில்லாமல் வந்து கடிக்க வாய் திறந்தது போல் தோன்றியது.


முகில்.


Tuesday, March 2, 2010

குட்டி... காதலின் வித்தியாசமான அணுகுமுறை


தனுஷ் ஒரு மாறுதலான ஒரு பக்கத்து வீட்டு தோற்றம் உள்ள வாலிப நாயகனாய், ஷ்ரேயா ஒரு வழக்கத்திற்கு மாறான வேடத்தில் அமைதியான ஒரு கல்லூரி நாயகியாய், ஒரு புதுமுக நாயகனுடன், கதையின் மென்மையை நம்பி மித்ரன் ஜவஹர் என்ற இயக்குநரின் பயணத்தில் துணை போயுள்ள ஒரு மாறுதலான படம்.

முன்பு மனநலம் இல்லாத ஒரு தனுஷை பார்த்திருக்கிறோம். தனுஷ் காதலியைத் துரத்துவது, தன் காதலுக்காக கொலையும் செய்வது என்ற சைகோ போல் இருந்த கதா பாத்திரத்தில் இருந்து, குட்டியில் காதலிக்காக இன்னொருவனை மணமுடித்து வைக்க முயல்வது, அந்த பாத்திரத்தில் நல்ல ஈடுபாட்டுடன் நடித்திருந்தது நல்ல முயற்சி.

குட்டி ஒரு லைட் காமெடி. கொஞ்சம் சீரியசாக கதையை காதலின் வட்டத்திற்குள் புகுத்தினாலும் வழக்கமான மசாலாவும் இல்லாமல் இல்லை. அரசியல்வாதி, அரசியல்வாதியின் பையன் ஸ்ரேயாவை காதலிப்பது, குட்டியும் அதே பெண்ணை காதலிப்பது போன்ற ஒரு மும்முணைக் காதல் குட்டியை கொஞ்சம் வழக்கமான படமாய் எண்ண வைத்தாலும் அந்த கதா பாத்திரங்களின் படைப்பு படத்தில் ரசிக்கும் படியில் காட்டப் பட்டிருந்தது.

வழக்கமாய் கத்தி எடுப்பது மாணவர்கள் அடித்துக் கொள்வது என்றிருக்கும் சிந்தனை, சற்றே மாற்றப்பட்டு இலகுவான அணுகுமுறையில் சக மாணவர்களுடன் முக்கிய நாயகர்கள் கலந்து சகஜ வாழ்கையை பிரதிபலித்தது பார்க்க ரசிக்கும் படியாய் இருந்தது.

தமிழ்ப் படம்னா பாட்டு சண்டை இல்லாம இருக்குமா? குட்டிக்கு அது ஓகே அப்படின்னே சொல்லலாம். மாணவர்கள் சாம்ராஜ்யத்தில் கலாட்டா இல்லாத ஒரு வாழ்க்கையா? திரைப்படம் கொஞ்சம் கனவு போல் இந்த விஷயங்களை உயர்த்தியே காண்பிக்கும் தண்மை இங்கு நன்றாக இருந்தது.

அடிதடி, கொலை, கொள்ளை என்று குடும்பத்தோடு பார்க்க இயலாத படங்களில் இருந்து ஒரு மாறுபட்ட முயற்சியான குட்டி வெகுஜன ரசனையுடன் எல்லாரையும் கவரும். குறிப்பாக இது குழந்தைகளை கதாநாயகனுடன் சேர்த்து, குழந்தைகளையும் ரசிக்க வைப்பதால், குட்டி போன்ற கதா நாயகர்கள் (தனுஷ்) குழந்தைகள் மனதிலும் இடம் பிடித்து விடுவதை பார்த்தேன்.

ஸ்ரேயா வழக்கமான காட்சி வனப்பு/ஈர்ப்பு குறைத்து கதா பாத்திரத்துடன் இணைந்து நடிக்க ஒத்துக் கொண்டது நடிப்பின் மற்ற பரிமாணங்களைத் தொட முயலும் பக்குவம்.

ஜவஹர் மித்ரனின் முயற்சி பாராட்டப் படவேண்டும். வெகுஜன ரசனையுடன் உள்ள படங்களை ஆபாசங்களைத் தவிர்த்து கொடுக்க முயன்றது ஒரு சமூக அக்கறை ஆனால் அதை முழுதும் செய்ய முடியாத வியாபாரத் துறை தமிழ் சினிமா என்று ஆங்காங்கே தெரியும் வசனங்கள், காட்சிகள் ....

காதல் பற்றி ஒரே மாதிரி கல்லூரி வாழ்வில் பார்த்த மக்களுக்கிடையில் குட்டி ஒரு வித்தியாசமான மாணவன், மனிதன் என்று காட்ட முயன்றதற்குப் பாராட்டு. கதையின் பிடிப்பிற்கு ஏற்படுத்திய வில்லனிஸம் இன்னும் சாதாரணமானதாகத்தான் இருந்தது போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

படப் பிடிப்புக் கலை, கலை இயக்குனரின் ஈடுபாடு மற்றும் இசை இயக்குனர் தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையமைப்பு யாவும் நேர்த்தியாய் அமைந்து குட்டிக்கு பலம் சேர்த்துள்ளது.

கல்லூரி வாழ்க்கையின் வரிசையில் வந்த திரைப்படங்களில் பல குப்பைகளும் உள்ளன ஆனால் குட்டி ரசிக்கும்படியான ஒரு படம் என்றே சொல்ல வேண்டும்! வாழ்த்துக்கள். தற்போதைய கல்லூரியின் நடப்புகள் இளமையின் விளையாட்டான வெளிப்பாடாய் குட்டி அணைவரையும் கவர்கிறான்.




Tuesday, February 23, 2010

ரேணிகுண்டா- முள்ளும் மலருமாய்...




ஒரு வட்டச் சுழற்சியாய் கதையின் நிகழ்வு சொல்லப்படுகிறது. நாயகனாய் வரும் ஒரு டீன் ஏஜ் சிறுவனின் வாழ்வு சூழ்நிலைகளின் பாதிப்பால் எப்படியெல்லாம் மாறுகிறது என்று சொல்ல ஏற்ப்படுத்திய கதைக்களம் பல கொலைகளை நடத்தும் கொலைக்களமாகவும் உள்ளது. சிறைக்கு செல்லும் நாயகன் படும் அவஸ்தை, சிறைக்குப் பின் நடக்கும் போலீஸ் அட்டூழியங்கள், அவனை அரவணைக்கும் நான்கு சிறுவயது கொலைகாரர்கள், பின் தப்பித்து செல்லும் கொலைகார நாயகர்கள் என்று கதையின் போக்கு மேலும் கொலைகளைச் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் பயணம் செய்கையில் ரேணிகுண்டாவில் வாழ்க்கையை சுற்றுவதாக காண்பிக்கப் படுகிறது....

சினிமாத் தனம் என்று சொல்லக் கூடிய விஷயங்கள் தமிழ் சினிமாவை பொதுவாக ஆட்டி படைக்கக் கூடிய ஒரு கடிவாளம் என்பது வன்முறையின் அணு ஆராய்ச்சியாக ரேணிகுண்டா நாயகர்கள் மூலமும் அவர்கள் செய்யும் பகல் கொலைகளிலும் தெரிகிறது. ஒரு காட்சியின் உத்வேகம் கொடூரமாக மாற்றப்படுவது இயக்குனரின் பார்வை. அது சில இடங்களில் யதார்த்தத்தை காட்ட வேண்டும் என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வன்முறையின் நுட்பங்களுடன் திரையில் தோன்றுவது பல உள்ளங்களில் பார்க்க முடியாத அளவிற்கு சகிப்புத் தண்மையை சோதிக்கிறது.

கதாபாத்திரங்கள் சகஜ வாழ்வின் அடிமட்டத்தில் வசிக்கும் சகஜ மனிதர்களை கொண்டு உருவாகிய பாங்கு பாராட்டப்படுகிறது. இந்தப் பாத்திரங்களின் பின்னணியில் ஒரு சோகம் இழையோடுவது நம் மனதில் ஒரு பரிதாபத்தை உருவாக்குகிறது. எத்தனையோ மனிதர்களின் சொல்ல முடியாத சோகங்கள் இங்கே பரிமாறப்பட்டுள்ளது நல்ல முயற்சி. ஒரு இயக்குனராய் காட்சிகளை அணுகிய விதம் நன்றாக இருந்தது. பாத்திரங்களின் பண்பு என்று இயக்குனர் நேரம் செலவிட்டு முக்கியமான கதா பாத்திரங்களை வடிவமைத்தமை அவரது சிரத்தையைக் காட்டுகிறது.

கொலைகளை செய்து ஓடித் திரிந்தவர்கள் ரேணிகுண்டாவில் ஒரு சிறிய குடும்பச் சூழ்நிலையில் வாழ்வின் நல்ல அம்சங்களைக் கண்டு மனம் வாடுவதும், திருந்த முயல்வதும், இயல்பாய் இருந்தது. ஒரு காவல் துறை ஆய்வாளர் முழுச் சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு உயிராய் சுட்டுத் தள்ளுவது தம் படத்தின் மீதும், பாத்திரங்கள் மீதும் ஒரு பரிதாப ஈர்பிற்க்காக இயக்குனர் செய்தது போல் கதையாள்மை தோன்றுகிறது. ஒரு ட்ராஜிடி வகை முடிவு, அதன் முன் ஏற்படும் கொலை வெறி மிக்க சூழ்நிலை நடப்புகளை ஒவ்வொரு பாத்திரமும் உயிரிழக்க நேரிடும் வேகம் கதையை முடிக்க உருவாக்கிய சூசகம் போல் இருப்பது சங்கடமாய் இருக்கிறது. நல்ல முடிவு தேடும் மென்மையான உள்ளங்களுக்கு ஏமாற்றம்தான்.

நடைமுறை வாழ்வின் சோகங்கள் ஆங்காங்கே சொல்லப்படுவதும், ஒரு கொடூரமான சமுதாயத்தின் சோதனைகளையும் காட்டும் இயக்குனர், வன்முறையை வேறு வகையில் காட்ட முயற்சி செய்திருந்தால் அணைத்து தரப்பு பார்வையாளர்களையும் ரசிக்க வைத்திருக்கலாம். கொஞ்சம் அதிகபட்சமாக வன்முறை ததும்பி வழிவது மனதைப் பாதிக்கிறது.

கணவனின் தவறுக்காக தனது பெண்மையை மற்ற ஆடவர்களுக்கு அற்பணிக்கும் ஆட்டோ ஓட்டுனரின் மனைவி, தங்கையின் வாழ்வுக்காக படும் கஷ்டம், ஆணாதிக்க வாழ்வில், பெண்கள் பல சோதனைகளுக்கும் உள்ளாகித்தான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மனம் வருந்தி சொல்லும் இடமும், அந்த பெண்மைக்குப் பின் உள்ள தாய்மை கொலைகாரர்களாய் திரியும் நாயகர்களிடம் அன்பு செலுத்தும் இடங்களில், தெரிகிறது. கதாபாத்திரங்களை கையாண்ட முறை அந்தப் பாத்திரங்களின் மீது இயக்குனர் வைத்திருந்த ஒரு ஆர்வத்தையும் பாசத்தையும் காட்டுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா என்று கதை செல்வதால் மொழியைக் கையாளும் சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படத்தானே செய்யும். ஆங்காங்கே அது தெரிகிறது. மற்ற வகையில் மாற்றுச் சினிமாக்களை அளிக்க முயலும் படைப்பாளிகளின் முயற்சியில் இதுவும் ஒன்று. கதை நன்றாக இருந்தது, சொல்ல வந்த முயற்சி நன்று, காட்சியமைப்புகள், கதையின் கள நிகழ்வுகள் என்பவை வேறு சிந்தனை வடிவாய் சில இடங்களில் இருந்து கொஞ்சம் மாற்றப் பட்டிருந்தால் இத்திரைப்படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம்.

யதார்த்தமான சூழ்நிலைகளில் படமாக்கிய பாங்கு, ஒளி ஓவியரின் ஒரு செய்திப்பட நிகழ்வு காட்டுவது போன்ற ஒளிப்பதிவு, (realistic approach ) இருக்கும் வெளிச்சத்தின் தண்மையை அப்படியே உபயோகப்படுத்திக் கொண்டது போன்ற காட்சிகள் கதைக்கு மெருகூட்டுகிறது.

கலை இயக்குனரின் தொழிலும், வன்முறை விரும்பிய இயக்குனரின் பார்வைக்கு வன்மம் சேர்த்த சண்டைக் காட்சி இயக்குனரின் முயற்சியும் அவர்கள் பணியின் திறத்தை காட்டுகிறது.

இசை இயக்குனர் கணேஷ் ராகவேந்திரா ஒரு நல்ல பரிமாணத்தை கொடுத்துள்ளார். பின்னணியிலும், மெலடியிலும். அவர் தன் பயணத்தை தொடர நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இதுதான் கதை என்ற பின் அதை இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று இயக்குனர் பன்னீர் எடுத்த விளைவு இந்த நல்ல முயற்சியில் வன்முறையை சற்று அதிகம் கொட்டிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

யாரும் சீண்டாத வாழ்வியல் நாயகர்களின் மன வலிகளை கொண்டு வந்து அலசிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு மென்மையான காதல் ஆசுவாசப் படுத்தியது. நிறைவேறாமல் வலியையும் கூட்டுகிறது அந்த ஊமைப் பெண்ணின் எதிர்பார்ப்பு வலிகளுடன்!

திரு பன்னீர் அவர்களே, வரும் கதைகளில் மேலும் நல்ல முனைவுடன் வித்தியாசங்களை தர ஒரு தமிழ்ப் பட நேசியாய் வாழ்த்துகிறேன்!

Wednesday, February 17, 2010

இயக்குனர் செல்வராகவனின் 1000-ல் 1-வன்


சின்னப் புள்ளைங்க படமா?


படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கமெண்ட் வந்தது என் மனைவியிடம் இருந்து. என்ன இது சின்னப் புள்ளைங்க படம் மாதிரி இருக்குதுன்னு. நான் ஒன்னும் சொல்லவில்லை. படத்தை முழுதும் பார்க்காமல் ஏதாவது பினாத்த வேண்டாமென்கிற ஒரு பணிவோடு மரியாதை செலுத்தும் வகையில் பார்த்து முடித்தேன்.

கற்பனை வண்டியைப் பூட்டி , வரலாற்றின் இரு தமிழரசர்களை அதன் குதிரைகளாக்கி, ஒன்றுக்கொன்று முண்டும் குதிரையாய், பாண்டிய-சோழப் பகை தொடர்கிறது என்று காட்ட 21 -ஆம் நூற்றாண்டின் சினிமா என்ற சாதனத்தை வைத்து ஒரு முயற்சி செய்தால் என்ன என்று செல்வராகவன் எடுத்த கரடு முரடான முடிவாய் ஆயிரத்தில் ஒருவன் பிறந்தான் போலும்.

கற்பனையின் யுக்தியை சக்தி வாய்ந்த காட்சிகளின் மூலம் சொன்னால் ரசிகர்களை கொஞ்சம் கண்கட்டி வித்தையில் மயக்கடித்தது போல் வசியம் செய்யலாம் என்று கிராபிக்ஸின் வரம் வேண்டி செய்த சிறு தவம் ஒரு புறம் இருக்க சோழன் வியட்நாமில் இருக்கும் மிங் ஹூ தீவில் வசிக்கிறான் என்று பாண்டியப் பெண் செய்யும் பழிப்படலப் பயணத்தின் கட்டங்கள் சிறுகுழந்தையை பயமுறுத்தி இருக்க வைக்கும் திகில் முயற்சிகளாய் தெரிகிறது.

இது என்ன வரலாற்று உண்மை என்று ஏடு புரட்டி நான் பார்க்கவில்லை. செல்வா அந்த ஆராய்ச்சியை செய்திருப்பார் என்று நம்பி சோழ மன்னன் மிங் ஹூ தீவில் இருந்தாலுமே, இவர்கள் பயணத்தின் ஏழு உயிர் விழுங்கும் பயங்கரங்களை சோழ மன்னன் செய்து வைத்துள்ளான் என்று சொல்லி அதற்காக உருவாக்கப் பட்ட சில காட்சிகள் இன்னும் சீரணிக்கப் பட இயலாமல் உள்ளன.

நிகழ்கால ஆத்மாக்களாய் கார்த்தி, ரீமா சென், அண்ட்ரியா, செய்யும் பயணம்தான் கதையின் 70% திரைச்சுருள் ஓட்டம் . சோழர்களின் அட்டகாசமான வியூகங்கள் என்றும் யாரும் புக முடியாத பயங்கரங்கள் என்று சோழர்கள் தமக்கு ஏற்படுத்திய பாதுகாப்பு மற்றும் போர்ச் சிந்தனைகளை காட்டிய செல்வா, சோழ மண்டலத்தின் அரசன் இன்னும் உயிரோடு உள்ளான் என்றும் அங்கே அவர்கள் பஞ்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் காட்டுவது போல் உள்ளது. தமிழர்கள் இவ்வளவு கருமை நிறம் வாய்ந்தவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. தனது மிதமிஞ்சிய கற்பனையின் இன்னொரு பரிமாண ஈர்ப்பிற்காக, சினிமாவிற்காக, வண்ணம் பூசிய ஒரு கரும்படையாய் தமிழர்கள்.

அது போக அவ்வளவு யுக்திகள் செய்த சோழர்கள், பாண்டியப்பெண் ரீமா சென்னின் சதியில் ஏமாந்து போய் நவீன போர் கருவிகளின் முன் சின்னா பின்னமாகிறார்கள் என்பது போல் கதை முடியும் போது, அந்த பிரமாண்டமான வியூகங்களின் பின்னணியில் இருந்த சோழர்கள் பூ.. இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு ஒரு வித்தியாசமான யுத்தம் நடந்திருக்கும் படி செய்திருந்தால், படத்தின் சிறப்பாய் அது அமைந்திருக்கும். இவ்வளவு கடுமையான பயணம், இவ்வளவு கடுமைக்கும் பின், ஒரு சோழ அறிவு, வீரம் என்று ஒரு போர் பட்டையைக் கிளப்பும் வகையில் இருந்தால் ஒரு பிரமாண்டமான உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும். படத்தின் உச்சகட்டம் திருப்தியை தந்திருக்கும்.

சினிமாவிற்காக சிந்திப்பது ஒரு தனித் திறமை. அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. அதனால், செல்வாவின் சிந்தனையை நான் குறை கூறவில்லை. அவரின் கற்பனைகள் முழுமையை தரவில்லை என்றே கூற வேண்டும். எதற்க்காக அந்த மந்திரக் காட்சிகள் என்று தெரியவில்லை. அதுதான் விஷயங்களை சிறு குழந்தைத் தனமாய் மாற்றுகிறது. யாதார்த்தம் என்று போனால் அதோடு போக வேண்டும். நம்ப முடியாத விஷயங்களை நம்பும் வகையில் சொல்ல வேண்டும். சொல்லும் விஷயத்தில் ஆணித்தரமான பின்னணி பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

சோழர்களின் சக்தியை, யதார்த்தத்தின் மேன்மையாய் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எந்த வித இயந்திரங்களும் இல்லாமலேயே, வெறும் மனித சக்தியால் வியப்பூட்டும் கோபுரங்களை எழுப்பியவர்கள் இன்னும் எவ்வளவோ சக்தி கொண்டவர்களாய் இருந்திருக்கலாம் என்று வேறு வகையில் சிந்தித்து, காட்ட வந்த பயங்கரத்தை காட்டி இருக்கலாம். கிராபிக்ஸ் ஆங்காங்கே இன்னும் சிறப்பாய் அமையாமல் கொஞ்சம் ஒரு செயற்கைத் தண்மையுடன் காட்சி தருவது தெரிகிறது. சில இடங்களில் green screen effects studio -வில் இருக்கக் கூடிய ஒரு உணர்வைத் தருகிறது.

இவர்கள் செய்த முயற்சியின் உருவம் பெரியது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் அதற்காக இந்தக் குழுவையும், தயாரிப்பாளரையும் பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக ஒளி ஓவியரின் பனியின் சிரத்தை ஆங்காங்கே ஒளிர்கிறது. பாலைவனங்களை காட்டும் போது கொஞ்சம் (overexposure technics ) வெளிரும் தண்மை உஷ்ணத்தின் உணர்வை அதிகரிக்க மற்றும், பார்த்திபன் வசிக்கும் குகை மண்டபம் போன்ற இடங்களில் உள்ள ஒளியமைப்புக் கலை, போன்றவை நன்கு இருந்தது. மிக அதிகமான கோணக் குளறுபடி இல்லாமல், யதார்த்தத்திற்கு ஏற்றது போல் தன காட்சியின் தண்மைகளை ஒழுங்கு செய்தது நன்று. (Night effects ) இரவுக் காட்சிகள், கொஞ்சம் நீல வண்ணத்தை குறைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்ற உணர்வு.

கலைஇயக்குனரை பாராட்டி ஆக வேண்டும். மிகவும் சிரத்தையுடன் பணியாற்றியுள்ளார். ஒப்பனைக் கலைஞர் பணியும் நன்கு அமைந்திருந்தது. அவருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருந்தார். இயற்க்கைக்கு மாறுபட்ட மனிதப் பூச்சுக்கள் இருந்தாலும், இயக்குனர் கேட்டதை அவர் ஒழுங்காகச் செய்திருந்தார்.

G . V. பிரகாஷின் இசை படத்துடன் இயைந்து இருந்தது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இருந்தது.

நடிகராய் கார்த்தி பரவாய் இல்லை. அவருடைய பழைய மேனரிசம் இந்தப் படத்திலும் ஒட்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் அவரது உடல் வாகை கவனிக்க வேண்டும். கொஞ்சம் சுதப்பலா உள்ளது நண்பா. ரீமா சென் மற்றும் அண்ட்ரியா அவர்கள் பணியை ஒழுங்காய் செய்திருந்தனர். கொஞ்சம் வித்தியாசமாய் முயல்வோம் என்று, அந்த பயணத்தில் அவர்கள் பேசும் வசனங்கள், ஒருவருக்கொருவர் காட்டும் ஈடுபாடு என்று செல்வா செய்த ஒற்றை வசன ஆங்கில முயற்சி பரவாயில்லை.

எதிர்பார்த்த படி ஆயிரத்தில் ஒருவன் ஓஹோ என்று கிடையாது என்பதை பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது சரிதான். ஏன் அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பதை செல்வராகவன் ஆராய வேண்டும். வித்தியாசமாய் முயன்ற உங்களுக்கு பாராட்டு உண்டு செல்வா ஆனால் கதையின் பாத்திரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று தேவை இல்லாமல் முண்டிக் கொண்டிருந்த ஒரு தண்மை எல்லாப் பாத்திரங்களையும் ஒரே நிலையில் காட்டியது, அது அவர்களின் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை. படம் எப்படி இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுக்க முடியாது என்ற பார்முலா இதிலும் உள்ளது. ஒரு சீரியசான பயணத்தில் இது தேவையில்லை என்பது ஏன் உணர்வு. பார்த்திபன் தன் பாத்திரத்தை மிக நன்றாக செய்திருந்தார்.

செல்வா, உங்கள் இளம் வயதில் நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பாராட்டியாக வேண்டும். ஒரு செயல் அதன் விளைவு பின் திருத்தல் புதிய அனுபவம் இதுதான் வாழ்வியல். அது கலைக்கும் பொருந்தும். ஆகையால் வாழ்த்துக்கள். நாங்கள் c டைப் ரசிகர்களைக் கவரவேண்டும் என்று கொச்சைப் படுத்தும் சில முயற்சிகளை விட்டுவிட்டு, நம் கலாசார வட்டத்துக்குள் நல்லதை செய்யுங்கள். புதிய எண்ணங்கள் புதிய நடைமுறைகளை பலன்தரும் பாங்கில் கொண்டு வர, கலை ஒரு பெரிய ஊடகச் சக்தியாய் அமைவது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆயிரத்தில் ஒருவன் என்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவன் வந்து போனான் என்ற உணர்வு உள்ளது. மனதில் நிற்காத சில சலனங்களுடன் ஆயிரத்தில் ஒருவனாய் சென்றும் விட்டான்.

Saturday, February 6, 2010

ஒளி ஓவியர்கள் சினிமாவின் மூச்சு...

சினிமா என்பது பல சிறந்த கலைகளை உள்ளடக்கியது. எல்லாம் ஒவ்வொரு விதத்தில் சினிமாவின் தனித்தண்மைக்கு உதவி புரிந்தாலும் சினிமடாக்ராபீ அல்லது ஒளி எழுத்தாளர்கள், அல்லது ஒளி ஓவியர்கள் அல்லது கேமராமேன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தக் கலைஞர்களின் பங்கு மிக மிக முக்கியாமாகிறது. கதைகளையும், கருத்துக்களையும் எழுத்தாளர்கள் சிந்திப்பது போல சிந்தித்து, இயக்குனரின் சிந்தனைகளை தத்ரூபமான காட்சிகளாய் கொண்டு வருவது என்பது இவர்களின் கையில்தான் உள்ளது. ஒரு சொல் திரையில் காட்சியாக வருகிறது என்றால், இந்தக் கலைஞர்கள் இல்லாமல் இயலாது. இரண்டு மணி நேரம் ஓடி முடிந்து விடும் ஒரு படத்தை எடுத்து முடிக்க மாதக் கணக்கில் ஆகும். சில படங்களை எடுப்பதற்கு வருஷம் கூட ஆகலாம்.


இவர்களின் பங்கு ஏன் அவ்வளவு முக்கியம் அல்லது சிறந்தது என்பது கூர்மையாக கவனித்தால்தான் தெரியும். எந்த வித பரிமாணமும் இல்லாத ஒரு மட்டமான திரையில், முப்பரிமாணத்திற்கு உரிய தண்மையை உருவாக்கும் இவர்கள் திறன் ஒரு ஓவியம் வரைவது போன்ற சிறப்புடையதாகும். ஓவியக் கலைஞரும் ஒரு ஒளி ஓவியரும் ஒரே முயற்சியில்தான் ஈடுபடுகிறார்கள். ஒரு காட்சியை அழகு படுத்துவதுடன், வெறும் திரையில் ஒரு தூரப் பரிமாணத்தையும், முப்பரிமாணத்தில் நாம் காணும் கட்சிகளை திரையில் அதைப் போலவே ஒளியாலும், நிழல்களை உருவாக்குவதாலும் முப்பரிமாணத்திற்கு அருகாமையில், நமது உணர்வுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட வேலையை கையாள்பவர்கள்.

உதாரணத்திற்கு, ஒரு நீண்ட சாலையின் விளிம்பில் சிறியதாய் ஒரு உருவம் நடந்து வருகிறது என்று எழுதி இருக்கும் காட்சி அமைப்பை ஒளி ஓவியர் எந்த நேரத்தில் படம் பிடித்தால் அந்தக் காட்சியின் அழகு கூடும் என்று எண்ணுவார். மேலும் அந்த நீண்ட சாலையை தனது காமெராவின் மூலம் எந்த வகையில் படம் பிடிக்கலாம் என்றும், அந்த காட்சியின் அழகு எந்தக் கோணத்தில் காட்டப்படும் போது, மக்களின் பார்வை வழியாய் மனதின் உள்ளுணர்வுகளில் எதிர்பார்க்கும் தண்மையை பெறவைக்க இயலும் என்றும் பல சிந்தனைகளின் பின் முடிவெடுத்து அக்காட்சியை இயக்குனரின் எண்ணங்களை திரை ஓவியமாய் படம் பிடிப்பார்.

இந்த சினிமாடாக்ராபீ என்ற கலையின் இன்னொரு முக்கியமான சிறப்பு அதை தொழில்நுட்ப மற்றும் கலைநுட்ப ஒருங்கினைவாய் செய்வது (Techno - esthetic art form) ஆகும். இந்தக் கலைஞருக்கு அறிவியல் சார்ந்த கல்வியும் கலை கண்ணோட்டமும் மிக அவசியம். ஒளி (knowledge of light properties ), ஒளியின் தன்மை (color temperature ) , ஒளியின் அளவு (intensity of light) , திரைச்சுருளின் வேதியியல் பண்புகள் (chemical properties of the film raw stock ), காமெராவின் இயந்திரப் பண்புகள் (mechanical properties of the camera , and lenses), ஒளிக்கருவிகள் (exposure control and measurement ) மற்றும் ராட்சஷ விளக்குகளின் பல பண்புகள் (giant lights) போன்றவை விஞ்ஞானத் துரையின் அறிவாகும். இவற்றை எல்லாம் சிறப்பாக கையாண்டு இவற்றின் மூலம் தன கலையுணர்வின் தனித்தன்மையை, இயக்குனரின் எதிர்பார்பிற்கேற்ப, கதையின் சிறப்பு கெடாமல் அற்புதமான காட்சிகளை கொண்டு வர ஒளி ஓவியர்கள் பிரயத்தனம் செய்கிறார்கள்.

ஒரு படத்தின் திரைக்கதை பல பக்கங்களில் இருக்கும். ஒவ்வொரு பக்கத்தின் நிகழ்வுகளும் பல காட்சிகளை படமாக்கி கோர்க்க வேண்டியதாய் இருக்கும். ஒவ்வொரு துளியாய் சேர்த்து சேர்த்து ஒரு திரைப்படம் நிறைகிறது. கதைகள் வெவ்வேறு விதமாய் இருக்கும். ஒவ்வொரு கதையின் கால கட்டம், அதற்க்கு எவ்விதமாய் காட்சிப் படபிடிப்பு, வண்ணத்தின் தன்மை, அது மனோதத்துவ ரீதியாய் நம் ஆழ் மனதில் ஏற்படுத்தும் உணர்வுச் சலனங்கள் என்று பல சீரிய ஆராய்ச்சிகளுக்குப் பின் அந்தக் காட்சியை படப்பிடிப்பு செய்கிறார் நம் ஒளி ஓவியர்.

உள்ளதிலேயே கடினமான தொழில் ஒரு ஒளி ஓவியரின் தொழில் என்றே கூற வேண்டும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் கூட, பல லட்சக் கணக்கில் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் பல இருக்கும். மிக மிக எச்செரிக்கையுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இந்தக் கலைஞர்களின் பொறுப்பில் விடப்படுகிறது.

இப்படிப்பட்ட கலைஞர்களின் சிறப்பு மெச்ச்சப்படவேண்டியதாகும். தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கும் ஒளி ஓவியர்கள் என மிகச் சிலரே உள்ளனர். எத்தனையோ கலைஞர்கள் இருந்தாலும் வித்தியாசமான ஒரு பங்களிப்பை தன் கலைக் கண்களின் மூலம் நமது கண்ணிற்கும் ரசனைக்கும் விருந்தளிக்கும் சிலரே சிறந்த கலைஞர்கள் என்ற பெயரைத் தட்டி செல்கிறார்கள்.

உலக ரீதியில் மிகச் சிறந்த ஒளி ஓவியர்கள் என்று பெயர் பெற்றவர்கள் இதோ!

விட்டோரியோ ஸ்டாரேரோ (Vittorio Storaro )
http://www.youtube.com/watch?v=pPhG4AxlbxY

ரோஜர் டீகின்ஸ் (Roger Deakins )
http://www.youtube.com/watch?v=agsj9pcUwLA

வெண் க்விஸ்ட் ( Sven Nykvist )
http://www.youtube.com/watch?v=CBHgY8S3OpI

வில்மஸ் சிக்மன்ட் (Vilmos Zsigmond )
http://www.youtube.com/watch?v=XUdifNdwO1g

கான்ரேட் ஹால் (Conrad Hall)
http://www.youtube.com/watch?v=mas4zNdBhzo

போன்றவர்கள் எல்லாக் கால கட்டங்களிலும் மிகச் சிறந்த ஒளி ஓவியர்களை பெயர் பெற்றவர்கள். இவர்களை போல் இதே வரிசையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

இந்தியாவின் சிறந்த ஒளி ஓவியர்களாய் பலரை காணலாம். மனதில் நின்ற சில மாற்றங்களை கலையில் கையாண்டு சிறப்பு பெற்றவர்கள் இதோ!

அசோக் மேத்தா (Ashok Mehta)
பாலு மகேந்திரா (Balu Mahendra )
அசோக் குமார் (Ashok Kumar )
ஷாஜி கருண் (Shaji N . Karun )
P .C ஸ்ரீராம் (P.C Sreeram )
சந்தோஷ் சிவன் (Santhosh Sivan)
மது அம்பாட் (Madhu Ambat )
கே.வி. ஆனந்த் (K .V . Anand )

இன்னும் பலர் இருக்கிறார்கள். சிறப்பு வாய்ந்த பணியாற்றி நம்மை ஆச்சர்யப் படுத்தியவர்கள். ஒரு நல்ல ஒளி ஓவியர் உருவாக கலையுணர்வு, ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற உந்துதல், நோக்கில் ஆக்கபூர்வம், அறிவுத்திறன், சீரிய சிந்தனை, போன்ற பல அடிப்படைகள் உள்ளன. அவற்றோடு தனது கலையை கையாளும் நேர்த்தியால் இவர்கள் சிறப்பு பெறுகிறார்கள்.

திரைப்படக் கலையின் ஒரு மிக உன்னதமான கலையடக்கங்களில் ஒளி ஓவியர்களின் பங்கு ஒரு தலை சிறந்த இடத்தை பெற, காகிதத்தில் எழுத்துக்களாய் குவிந்து கிடக்கும் எண்ணங்களை பிரமிப்பூட்டும் வகையில் நேர்த்தி மிகு காட்சிகளாய் தரும் அறிய காரியத்தை செய்யும் பணியே இவர்களை ஒரு படி உயர்த்தி விடுகிறது.

எல்லாக் கலைகளும் சிறப்புடையவைதான் ஆனால் ஒரு தொழில்நுட்ப மற்றும் கலைநுட்ப ஒருங்கினைவாய் இயக்கும் (Techno - esthetic art form) ஒளிப்பதிவு இயக்குனர்கள் கடமையும் பணிச்சிறப்பும் திரைப்படம் ஒரு காட்சி வழிக் கலை என்ற அடிப்படையில் அவர்களை மேன்மை படுத்துகிறது.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பெயர் பெற்ற பலர் இட்ட வித்து பல புதிய சிந்தனை உள்ள இளம் ஒளி ஓவியர்களை உருவாக்கி தமிழ் சினிமாவின் பெயரை உலக ரீதியில் தலை உயர்த்திக் காட்டி உள்ளது. வரும் காலங்களில் இன்னும் வியக்க வைக்கும் கலா ஜீவிகள் வருவார்கள் என்பது நிச்சயம். தமிழ் திரைப்படக் கலையின் புகழை பரப்புவதற்கு முயலும், இன்றைய மற்றும் நாளைய ஒளி ஓவியர்கள் அனைவரையும் வாழ்த்துவோமாக!

முகில்

Wednesday, February 3, 2010

கந்தகோட்டை...

சாதாரணமான கற்பனை...சாதாரணமான முயற்சி... கதையை எப்படிச் செய்தால் விறுவிறுப்பு ஏற்படும் என்று முயன்று, ஒரு கருவை வைத்து வழக்கமான மசாலாவுடன் கட்டிய கோட்டை....

அஸ்திவாரம் அவ்வளவு ஸ்திரமாக இல்லை இயக்குனர் நண்பரே. உங்கள் முயற்சி பாராட்டத் தகுந்தது ஆனால் முத்திரை பதிக்கும் அளவு படத்தின் ஆற்றல் இல்லை என்பது என் பார்வை. படம் எடுப்பது சாதாரணமான வேலை இல்லை ஆனால் அந்த வாய்ப்பு இன்னும் நன்றாகப் பயன் படுத்தப் பட்டிருக்கலாம்.

காதலை பிரித்து வைக்கும் கதா நாயகன் , காதலை சேர்த்து வைக்கும் கதா நாயகி இவர்கள் சேரும் வரை ஓடும் கதை... அவர்கள் காதலில் விழும் போது வழக்கமான தமிழ் சினிமாவின் தண்டவாளத்துக்கு மாறுகிறது. ஏய்... என்று கத்தலும் கூச்சலும் உள்ள ஒரு மாமனித வில்லன் (சம்பத் குமார்- அண்ணாச்சியாக), அவரை சுற்றி ஒரு கும்பல், அந்த வில்லன் ஒரு சைகோ என்ற கற்பனை வழு வழு வந்த மரபே...

பொழுது போக்கு என்று ரசிக்கத்தக்க வகையில் காமெடியும் சில காட்சிகளும் இருந்தன என்பது உண்மை. அதே பாணியில் படத்தை கொண்டு போய், சில நல்ல விஷயங்களை சொல்லி மக்களிடம் சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பாணி வேறு தரம் கொண்டதாய் இருந்திருக்கும்.

முடிந்ததை பேசி என்ன பயன் என்று சொல்லலாம் ஆனால் அடுத்த முயற்சிக்கு முன் சிந்திக்கலாமே! சக்திவேல் (இயக்குனர்) மாறுபட்ட கருத்துக்களின் மூலம் மக்கள் மனதை கவர்வது அவசியம். உங்கள் எதிர்காலம் உங்கள் சிந்தனையில் உள்ளது. தொழில்நுட்பக் குழுவின் பங்கு ஓகே. சிறப்பு அம்சங்களாய் மனதில் நிற்கும் அளவு ஒன்றும் இல்லை.

நகுலன் (கதா நாயகன்) மற்றும் பூர்ணிமா (நாயகி) இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. பூர்ணிமா தொடர்ந்து தன உடல்கட்டை, முக வசீகரத்தை பராமரிக்க வேண்டும். ஒரு சிறப்பு என்னவென்றால் பூர்ணிமா ஒரு கோணத்தில் ஸ்ரேயா போல் தெரிகிறார், சில நேரங்களில் அசின் மிக்ஸ், என்று ஒரு கலவை வசீகரம் உள்ளது.

கோட்டைக்குள் போகிறோம் என்று சென்ற வேகம் இல்லீங்க....கந்தக்கோட்டை ஒரு சின்ன மச்சு வீடுதானே .... ஏமாற்றி விட்டீர்களே!

Saturday, January 30, 2010

தமிழ்ச் சினிமாவின் புதிய பரிமாணங்கள்...

தமிழ்த் திரைப்படங்கள் மெல்ல மெல்ல காலத்தின் நியதியை கண்டு வருகிறது என்பதில் மகிழ்வடைகிறேன். முன்பு உள்ள சினிமாக்களின் அணுகுமுறை பிரபலமான முகங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களை மக்கள் மனதில் தெய்வத்துக்கு அடுத்த ஒரு இடத்தையும் கொடுத்து, அதில் முதலீடு செய்து தமிழ் படங்கள் ஒரு முதலாளித்துவ பாணியை வைத்ததை நாம் அறிவோம்.

T.R. மகாலிங்கம், p.u. சின்னப்பா, தியாகராஜா பாகவதர் காலம் மாறி, MGR, சிவாஜி, போன்றவர்கள் ஒரு தரம், S.S.R, ஜெய்ஷங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், போன்றவர் என்று கதாநாயகர்களில் அடுத்த படிக்கட்டு, அவர்களை சார்ந்து நகைச்சுவை நடிகர்கள், பின் வில்லன் நடிகர்கள் எனவும், கதாநாயகர்கள் விரும்பிய கதாநாயகிகள் என்றும் அவர்களை மட்டுமே நம்பி மூலதனம் செய்யும் தயாரிப்பாளர்கள் என்றும் திரைப்பட வட்டாரத்துக்குள் சாதரணமான மனிதர்கள் நுழைவது சற்றும் நினைத்து பார்க்க முடியாத காரியம்.
அது மட்டுமில்லை. இந்த கால கட்டத்தில் புதிய முயற்சிகளை எண்ணிப் பார்ப்பது என்பது இயலாத காரியம். நம் பார்முலா படங்கள் கதாநாயகர்களுக்கு மட்டுமே கதைகள் செய்வதும், அவர்கள் செய்வதை நம்ப வைப்பதுமாய் நம் படங்களும், அதை ரசிக்க நம் மக்களும் ஒரு வழிப் பயணமாய் இருந்தது...

சில படங்கள் சில நல்ல கதைகளை கையாண்டாலும், அவை கதாநாயகர்களை மையமாக வைத்தே இருக்கும் என்பதை பார்த்தால் புரியும். பொதுவாக அன்றிலிருந்து இன்று வரை கதைகள் ஹீரோக்களை பற்றியே பேசிவந்துள்ளன. நாம் அதை ரசித்து வந்துள்ளோம். இதை குற்றம் என்று சொல்லவில்லை என்றாலும், நம் கண்ணோட்டங்கள், நமது சிந்தனை, ஒரு குண்டு சட்டிக்குள் குதிரையாகவே ஓடியதாய் இருந்தது. இந்த காலகட்டத்தில், வித்தியாசமான கதையை மையமாக வைத்து, ஒரு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப் போன கருத்துடன் திரைப்படங்களை அறிமுகம் செய்தவர் என்றால் அது பாலச்சந்தர் அவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். திரு கே. பாலச்சந்தர் அவர்களின் புதிய முயற்சிகளை மக்கள் இனம் கண்டாலும், அடுத்த தழுவிய காலகட்டத்தில் மறுபடியும் தமிழ் சினிமா கமல், ரஜினிகாந்த், என்ற இன்னும் இரண்டு ஹீரோக்களை தெய்வங்களாகி கொண்டது. திரைப்படம் எடுப்பது மக்களை ரசிக்கவைப்பதுடன் வியாபார ரீதியில் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வை சார்ந்திருந்தது. அது தொன்று தொட்டு இருந்து வந்த தொழில் மந்திரம் என்றாலும், கலை என்ற அடிப்படையில் சமூக ரீதியாய் திரைப்படங்கள் பெரிய பரிமாற்றங்களை கொண்டு வரவில்லை. நல்ல கருத்துக்கள் கதைகளுக்குள் இருக்கும் ஆனால் ஹீரோக்கள் செய்யும் பயணத்தில் அக்கருத்துக்கள் மறைந்து போகும் அளவு அவர்களின் உருவம் பெரிதகியிருக்கும்.

திரைப்படத்துறைக்குள் நடிகர்களாய் போவது ஒரு விண்ணைத்தொடும் முயற்சி என்றால் தொழில் நுட்பக் கலைஞர்களாய் போவது ஒரு இமாலயப் பிரயத்தனம்.
அந்தக் காலத்தில் இது ஒரு மாயக் களமாய் மக்களின் பார்வைகளில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட ஜாலக் கூடமாய் இருந்தது.

திரைப்படங்கள் என்பது ஒரு தொழிற்சாலையாய் இயங்குவது ஆனால் பொதுமக்களோ, ஆர்வலர்களோ அருகில் செல்ல இயலாத ஒன்றாய் பிரத்யேகமான ஒன்றாய் இருந்தது.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் குழுவின் மூலம் உள்ளே நுழைந்த போது அது ஒரு மாற்றமாய் மட்டும் இல்லாமல் திரைபடத்துறையின் இயல்புகளையும் மாற்றியது. ஆபா, உதயகுமார் போன்றவர்கள் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்தது புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களை திரையுலகம் பார்த்தது. இளைஞர்களாய் வந்தாலும், அவர்கள் எடுத்த படங்களும், வியாபார ரீதியாய் மத்துமே இருந்தன. மறுபடியும் பெரிய நடிகர்களை வைத்து இயக்கி, பணம் மற்றும் பெயர் செய்யும் யுக்திகள்தான் தொடர்ந்தது.

தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தார்கள் என்றால் அது திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றும் சொல்வது முக்கியம். ஒளிப்பதிவு, திரைக்கதைகள், அணுகுமுறை, படமாக்கும் விதம் போன்ற முயற்சிகளில் ஆர்வம் செலுத்தி திரைப்படங்களின் உருவை மாற்ற முயன்றார்கள்.

கதைக்களத்தில் பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்த முயற்சிகள் ரசிக்கும் படி இருந்தது, தமிழ் ரசிகர்களை வித்தியாசங்களை பார்க்க வைத்தது. புது முகங்களை அறிமுகப்படுத்தி கதையை ஹீரோவாக மாற்றிய பெருமை ஓரளவு இவர்களை சாரும் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.

இந்தக் கடந்த காலகட்டங்களில் மறுபடியும் மறுபடியும் எப்படியாவது பிரபலங்கள் திரைப்படங்களில் வியாபிதிருந்தார்கள். அந்த நிலையை மாற்றிய புதிய தமிழ்ப் படங்களை பார்க்க பார்க்க நான் அதிசயிக்கிறேன். காலச் சுழற்சியில் மாற்றங்கள் தானாக வரும் என்ற உண்மை தமிழ் திரை உலகை விட்டு வைக்கவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தமிழ் படங்கள் கதை களங்கள் மாறியுள்ளன. இளம் சிந்தனை வித்தியாசமாய் புது விதைகளை விதைத்தது. மரபு சார் கதைகளில் இருந்து வித்தியாசங்களைப் பார்த்தது. முக்கியமான மாற்றமாய் யாரும் அறியா புது முகங்களை கதை நாயகர்களாய் அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் வெற்றியையும் தட்டியுள்ளது.

மக்களின் கண்ணோட்டம் மாறிவருகிறது, தலைமுறை, சந்ததி மாற்றங்கள் என்று திரையுலகமும் ரசிகர்களும் மாறியுள்ளார்கள்.

வியாபார நோக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மாற்றங்களை எண்ணும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், இயக்குனர்கள் வருகை தமிழ் படங்களின் சிறப்பை உயர்த்தி உள்ளது. அவர்களின் இந்த முயற்சி புதிய கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்க வசீகரமாய் இருந்த கதா நாயகர்கள் போய் ஒரு சாதாரண மனிதனாய் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மனித நாயகர்கள் தமிழ் திரைப்படத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடியாத ஒரு உண்மை. தமிழ் படங்களுக்கு இதுவே ஒரு புதிய பரிமாணம்.

இந்த பரிமாணம் நம் ரசனையை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போவதாய், வாழ்க்கையின் இயல்போடு நடை போடுவதாய் மாற்றியுள்ளது. கலையின் நிறைவு உண்மையோடு கலந்ததாய் இருந்தால் கலைக்கு பெருமை. அந்த முயற்சியில் ஈடுபட்ட, ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்த புதிய தலைமுறை படைப்பாளிகளின் வருகைக்கு வாழ்த்து சொல்லுவதுடன், அவர்களின் முயற்சிகளுக்கு சிகப்பு கம்பளம் இட்ட நல்ல தயாரிப்பாளர் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

வாழ்க வாழ்க புதிய தலைமுறை எழுத்தாளர்களே ! புதிய தலைமுறை இயக்குனர்களே!

Tuesday, January 26, 2010

வாழ்த்துக்கள்! நற்பணி தொடரட்டும் பாலா...

இயக்குனராக வேண்டும் என்ற கனவு எத்தனையோ பேருக்கு உள்ளது. நான் நடிக்கத்தான் வந்தேன் ஆனால் இயக்குநராகி விட்டேன் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். இயக்குனராகிவிட்டாலும் கூட நல்ல கருத்துக்கள், சமுதாய அக்கறை உள்ள கதைகள், உணர்வு பூர்வமான அணுகுமுறை, கதை சொல்லும் பாங்கு போன்ற உயர்ந்த குணாதிசயங்கள் எல்லா இயக்குனர்களுக்கும் வந்துவிடுவதில்லை. நான் சேதுவில் சில காட்சிகளை பார்க்கும் போதே நினைத்தேன் நன்றாக முயன்றிருக்கிறார்கள் என்று. அப்போது இயக்குனர் யார் என்று நான் கேட்கவில்லை ஆனால் பாலா என்ற பெயர் மனதில் தங்கி இருந்தது. அண்மையில் நான் கடவுள் பார்த்த போது அதைப் பற்றி பாராட்டி ஒரு சிறு கருத்துப் பரிமாற்றம் பதிவு செய்திருந்தேன். அதில் கையாளப் பட்டிருக்கிற விஷயங்களை பாராடியிருந்தேன். இன்று பாலா ஒரு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்ற போது மிக்க மகிழ்வடைகிறேன். நல்ல விஷயங்களை பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் இன்னும் தேர்வுக் குழுவில் இருப்பது தெரிய வருகிறது. கலை என்பது, மொழி மற்றும் வாழ்விட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நல்ல தேர்வு உறுதி செய்திருக்கிறது. பாலாவின் தேர்வு இன்னும் நல்ல முயற்சிகள் செய்ய வளரும் இளம் உள்ளங்களுக்கு உரமாக அமையும். பாலா இன்னும் நல்ல திரைப்படங்களை உலகிற்குத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரைப்படக் கலையின் பரிமாணங்களை பாலா மேன்மேலும் ஆராய வேண்டும், புதிய முயற்சிகளை, கருத்துக்களை கையாள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ....

முகில்

Monday, January 11, 2010

ஈரம்


ஈரம் ஒரு வீரமான முயற்சி. புதுமுகங்கள், பழைய கதைக்களம், நவீனம், நல்ல பார்வை இம்முயற்சியை திருவிணையாக்கி உள்ளது. திரைப்படத்தின் ஆணிவேர் நல்ல திரைக்கதை. அதை இதில் ஓரளவு புரிந்து செயல் படுத்திய விதம் விவேகம்!

ஆவிகள் உள்ளது என்பது காலா காலமாய் நாம் கேட்டு பயப்பட்ட விஷயம். ஈரத்தில் உள்ள ஈர்ப்பு ஆவியே! ஷங்கர் தயாரிப்பாளராய் பணம் போடுகிறார் என்றல் சும்மா இல்லியே! ஆவி பணத்தை தரும் என்ற நம்பிக்கைதான்! அறிவழகனின் அறிவழகில் உள்ள ஈரம் பதமாக ஒரு படமாக வந்து பலரையும் பேசவைத்துள்ளது! வாழ்த்துக்கள் டீம்!

கல்லூரிக்காலம், காதல் ஈர்ப்பு, வாழ்க்கை முறை, பண்பாடு, எண்ண முரண்பாடு என்று வாசு-ரம்யா காதல் பிரிய, வாழ்க்கை பாலகிருஷ்ணன் என்ற ஒரு வரனை அறிமுகப்படுத்துகிறது ரம்யாவின் வாழ்வில்! மனரீதியாய் பாலா ஒரு தர நிர்ணய வரைமுறை உள்ளவன் ! அவன் வகுத்த தரம் மாறிவிட்டால் ஏற்றுக்கொள்ள இயலாதவன். எதிலும் களங்கம் இல்லா புதுத்தனம் நாடும் பாலாவிற்கு ரம்யா ஏற்கனவே இன்னொருவனால் காதலிக்கப்பட்டவள் என்ற உண்மை தெரியவர உள்ளூர வெறுப்படைகிறான். ரம்யாவின் மீது வெறுப்படையும் சில காலனிக்காரர்கள் பரப்பிய வதந்தி, ரம்யாவை கொலை செய்ய வைக்கிறது. பாலா கொலை செய்துவிட்டு அதை தற்கொலை என்று உலகை நம்ப வைத்துவிட்டு தான் சாதாரண வாழ்க்கையை அமைத்து கொள்ளும் போது ரம்யாவின் பழைய காதலன் வாசு ஓர் போலீஸ் அதிகாரியாய் வந்து உண்மையை விசாரித்து நடந்தது கொலை என்று நிரூபிக்கிறார்.

அபாண்டமாய் கள்ளக்காதல் பழி சுமத்திக் தன்னைக் கொலை செய்த கணவனையும், அதற்க்கு காரணமான சிலரையும் ரம்யாவின் ஆவி பழி வாங்குகிறது.

திரைக்கதை தண்ணீர் போல் விசையுடன் ஓட நமக்கு அது அழகாக தெரிகின்றது. அறிவழகனின் படகை ஓட்டிச்செல்லும் ஒளி ஓவியர் மனோஜ், கலையாளர், மற்றும் இசை ஓவியர் தமன் தகுந்த பலம் கொடுத்துள்ளது அழகு! நடிப்பில் ஆதி, நந்தா மற்றும் சிந்து மேனன் நல்ல முயற்சி செய்துள்ளனர்! பாத்திரப்படைப்பு என்பது ஒரு எழுத்தாளனின் பார்வை. அவன் ரசித்த சில பாத்திரங்கள் இப்படத்தில் உயிர் பெற்றுள்ளது ரசிக்கும் வகையில்.
நமது வாழ்வில் நாம் நமக்கு வைத்துக்கொள்ளும் வரைமுறைகளை எல்லையாக்கி மற்றோரை அப்படியே எதிர்பார்ப்பது தவறு என்ற ஓர் கருத்தை இப்பாத்திரங்கள் கூறுவதும், நம் வாழ்க்கையில் உள்ள குறைகளை மறைக்கப் பழி போடுவதால் ஏற்படும் துயரத்தையும் இந்தக் கதையின் ஒரு வேர் தாங்குகிறதைப் பார்த்தேன்.

தரமான படைப்பை தர வேண்டும் என்ற உந்துதல் தெரிகிறது. அதை பாராட்ட வேண்டும். சமூகத்தில் நடக்கும் சில விடயங்கள் அப்படியே படமாவதன் மூலம் ஒரு மட்டத்தில் இருந்து பார்க்கும் ஒரு தலைமுறைக்கும் மறு மட்டத்தில் உதிக்கும் இன்னொரு தலைமுறைக்கும் உள்ள இடைவெளி அங்கலாய்ப்பை அளிக்கவும் செய்கிறது. சில காட்சிகள் இளம் வயதினரின் உள்ளங்களை பாதிக்கலாம்.


நிறைவேறாத காதலின் வலியை ஈரம் மென்மையான உணர்வாய், காதலுக்கு இருக்கும் ஒரு மதிப்பாய் வாசுவின் மூலம் கொண்டு வந்து தன் காதலி களங்கமற்றவள் என்று வாசுவை உணர வைத்ததை அவன் வாயால் மதிப்புடன் சொல்லி இருக்கலாம். ஈரம் இல்லாத காதலன் போல் வாசு ரம்யாவின் காதலை தூக்கி எறிந்ததும், அவள் இறந்த பின்னும் பத்திரிக்கை செய்தியை காண்பித்து ரம்யாவின் ஆவியிடம் 'இப்ப என்ன பெயர் கிடைச்சிருக்கு தெரியுமா என்று கேட்டு "கள்ளக்காதல்" என்று போலீஸ் தனமாக கேட்பதும் வாசுவின் பாத்திரப்படைப்பில் ஒரு பலஹீனம் போல் தெரிந்தது. வாசு சில நல்ல வார்த்தைகளை கூறி தனியே நடந்து போவது போல் படத்தின் கடைசி காட்சி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாசு அப்படி போக, மறு புறம் சிகப்பு குடை, கசியும் பெட்ரோல்... என்று தொடரும் குரோதம்...

சினிமாத் தனம் என்று சொல்லக்கூடிய விஷயங்களாய் சில வசனங்கள், காட்சிகள் என்று ஆங்காங்கே தெரிந்தாலும் கதையின் மூலம் சொல்ல விரும்பிய உணர்வு, நல்ல முயற்சியுடன் வெளிவந்துள்ளது. அது எதிர்பார்க்கப்பட்ட விடையை அளிக்கிறது. பார்ப்பது சினிமா என்ற உணர்வின் மேல் நம்மை உட்கார வைத்து கூட்டி சென்று இப்பயணம் ஒரு பயம் தரும் பாத்திரங்கள் அடங்கியது என்று சொல்லும் இந்த குழுவின் முயற்சி நன்று!
ஈரத்தின் தீரத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!
முகில்