Tuesday, February 23, 2010

ரேணிகுண்டா- முள்ளும் மலருமாய்...




ஒரு வட்டச் சுழற்சியாய் கதையின் நிகழ்வு சொல்லப்படுகிறது. நாயகனாய் வரும் ஒரு டீன் ஏஜ் சிறுவனின் வாழ்வு சூழ்நிலைகளின் பாதிப்பால் எப்படியெல்லாம் மாறுகிறது என்று சொல்ல ஏற்ப்படுத்திய கதைக்களம் பல கொலைகளை நடத்தும் கொலைக்களமாகவும் உள்ளது. சிறைக்கு செல்லும் நாயகன் படும் அவஸ்தை, சிறைக்குப் பின் நடக்கும் போலீஸ் அட்டூழியங்கள், அவனை அரவணைக்கும் நான்கு சிறுவயது கொலைகாரர்கள், பின் தப்பித்து செல்லும் கொலைகார நாயகர்கள் என்று கதையின் போக்கு மேலும் கொலைகளைச் செய்யவும் பணம் சம்பாதிக்கவும் பயணம் செய்கையில் ரேணிகுண்டாவில் வாழ்க்கையை சுற்றுவதாக காண்பிக்கப் படுகிறது....

சினிமாத் தனம் என்று சொல்லக் கூடிய விஷயங்கள் தமிழ் சினிமாவை பொதுவாக ஆட்டி படைக்கக் கூடிய ஒரு கடிவாளம் என்பது வன்முறையின் அணு ஆராய்ச்சியாக ரேணிகுண்டா நாயகர்கள் மூலமும் அவர்கள் செய்யும் பகல் கொலைகளிலும் தெரிகிறது. ஒரு காட்சியின் உத்வேகம் கொடூரமாக மாற்றப்படுவது இயக்குனரின் பார்வை. அது சில இடங்களில் யதார்த்தத்தை காட்ட வேண்டும் என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வன்முறையின் நுட்பங்களுடன் திரையில் தோன்றுவது பல உள்ளங்களில் பார்க்க முடியாத அளவிற்கு சகிப்புத் தண்மையை சோதிக்கிறது.

கதாபாத்திரங்கள் சகஜ வாழ்வின் அடிமட்டத்தில் வசிக்கும் சகஜ மனிதர்களை கொண்டு உருவாகிய பாங்கு பாராட்டப்படுகிறது. இந்தப் பாத்திரங்களின் பின்னணியில் ஒரு சோகம் இழையோடுவது நம் மனதில் ஒரு பரிதாபத்தை உருவாக்குகிறது. எத்தனையோ மனிதர்களின் சொல்ல முடியாத சோகங்கள் இங்கே பரிமாறப்பட்டுள்ளது நல்ல முயற்சி. ஒரு இயக்குனராய் காட்சிகளை அணுகிய விதம் நன்றாக இருந்தது. பாத்திரங்களின் பண்பு என்று இயக்குனர் நேரம் செலவிட்டு முக்கியமான கதா பாத்திரங்களை வடிவமைத்தமை அவரது சிரத்தையைக் காட்டுகிறது.

கொலைகளை செய்து ஓடித் திரிந்தவர்கள் ரேணிகுண்டாவில் ஒரு சிறிய குடும்பச் சூழ்நிலையில் வாழ்வின் நல்ல அம்சங்களைக் கண்டு மனம் வாடுவதும், திருந்த முயல்வதும், இயல்பாய் இருந்தது. ஒரு காவல் துறை ஆய்வாளர் முழுச் சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு உயிராய் சுட்டுத் தள்ளுவது தம் படத்தின் மீதும், பாத்திரங்கள் மீதும் ஒரு பரிதாப ஈர்பிற்க்காக இயக்குனர் செய்தது போல் கதையாள்மை தோன்றுகிறது. ஒரு ட்ராஜிடி வகை முடிவு, அதன் முன் ஏற்படும் கொலை வெறி மிக்க சூழ்நிலை நடப்புகளை ஒவ்வொரு பாத்திரமும் உயிரிழக்க நேரிடும் வேகம் கதையை முடிக்க உருவாக்கிய சூசகம் போல் இருப்பது சங்கடமாய் இருக்கிறது. நல்ல முடிவு தேடும் மென்மையான உள்ளங்களுக்கு ஏமாற்றம்தான்.

நடைமுறை வாழ்வின் சோகங்கள் ஆங்காங்கே சொல்லப்படுவதும், ஒரு கொடூரமான சமுதாயத்தின் சோதனைகளையும் காட்டும் இயக்குனர், வன்முறையை வேறு வகையில் காட்ட முயற்சி செய்திருந்தால் அணைத்து தரப்பு பார்வையாளர்களையும் ரசிக்க வைத்திருக்கலாம். கொஞ்சம் அதிகபட்சமாக வன்முறை ததும்பி வழிவது மனதைப் பாதிக்கிறது.

கணவனின் தவறுக்காக தனது பெண்மையை மற்ற ஆடவர்களுக்கு அற்பணிக்கும் ஆட்டோ ஓட்டுனரின் மனைவி, தங்கையின் வாழ்வுக்காக படும் கஷ்டம், ஆணாதிக்க வாழ்வில், பெண்கள் பல சோதனைகளுக்கும் உள்ளாகித்தான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மனம் வருந்தி சொல்லும் இடமும், அந்த பெண்மைக்குப் பின் உள்ள தாய்மை கொலைகாரர்களாய் திரியும் நாயகர்களிடம் அன்பு செலுத்தும் இடங்களில், தெரிகிறது. கதாபாத்திரங்களை கையாண்ட முறை அந்தப் பாத்திரங்களின் மீது இயக்குனர் வைத்திருந்த ஒரு ஆர்வத்தையும் பாசத்தையும் காட்டுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா என்று கதை செல்வதால் மொழியைக் கையாளும் சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படத்தானே செய்யும். ஆங்காங்கே அது தெரிகிறது. மற்ற வகையில் மாற்றுச் சினிமாக்களை அளிக்க முயலும் படைப்பாளிகளின் முயற்சியில் இதுவும் ஒன்று. கதை நன்றாக இருந்தது, சொல்ல வந்த முயற்சி நன்று, காட்சியமைப்புகள், கதையின் கள நிகழ்வுகள் என்பவை வேறு சிந்தனை வடிவாய் சில இடங்களில் இருந்து கொஞ்சம் மாற்றப் பட்டிருந்தால் இத்திரைப்படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம்.

யதார்த்தமான சூழ்நிலைகளில் படமாக்கிய பாங்கு, ஒளி ஓவியரின் ஒரு செய்திப்பட நிகழ்வு காட்டுவது போன்ற ஒளிப்பதிவு, (realistic approach ) இருக்கும் வெளிச்சத்தின் தண்மையை அப்படியே உபயோகப்படுத்திக் கொண்டது போன்ற காட்சிகள் கதைக்கு மெருகூட்டுகிறது.

கலை இயக்குனரின் தொழிலும், வன்முறை விரும்பிய இயக்குனரின் பார்வைக்கு வன்மம் சேர்த்த சண்டைக் காட்சி இயக்குனரின் முயற்சியும் அவர்கள் பணியின் திறத்தை காட்டுகிறது.

இசை இயக்குனர் கணேஷ் ராகவேந்திரா ஒரு நல்ல பரிமாணத்தை கொடுத்துள்ளார். பின்னணியிலும், மெலடியிலும். அவர் தன் பயணத்தை தொடர நல்ல வாய்ப்புகள் உள்ளன.

இதுதான் கதை என்ற பின் அதை இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று இயக்குனர் பன்னீர் எடுத்த விளைவு இந்த நல்ல முயற்சியில் வன்முறையை சற்று அதிகம் கொட்டிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

யாரும் சீண்டாத வாழ்வியல் நாயகர்களின் மன வலிகளை கொண்டு வந்து அலசிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு மென்மையான காதல் ஆசுவாசப் படுத்தியது. நிறைவேறாமல் வலியையும் கூட்டுகிறது அந்த ஊமைப் பெண்ணின் எதிர்பார்ப்பு வலிகளுடன்!

திரு பன்னீர் அவர்களே, வரும் கதைகளில் மேலும் நல்ல முனைவுடன் வித்தியாசங்களை தர ஒரு தமிழ்ப் பட நேசியாய் வாழ்த்துகிறேன்!

Wednesday, February 17, 2010

இயக்குனர் செல்வராகவனின் 1000-ல் 1-வன்


சின்னப் புள்ளைங்க படமா?


படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கமெண்ட் வந்தது என் மனைவியிடம் இருந்து. என்ன இது சின்னப் புள்ளைங்க படம் மாதிரி இருக்குதுன்னு. நான் ஒன்னும் சொல்லவில்லை. படத்தை முழுதும் பார்க்காமல் ஏதாவது பினாத்த வேண்டாமென்கிற ஒரு பணிவோடு மரியாதை செலுத்தும் வகையில் பார்த்து முடித்தேன்.

கற்பனை வண்டியைப் பூட்டி , வரலாற்றின் இரு தமிழரசர்களை அதன் குதிரைகளாக்கி, ஒன்றுக்கொன்று முண்டும் குதிரையாய், பாண்டிய-சோழப் பகை தொடர்கிறது என்று காட்ட 21 -ஆம் நூற்றாண்டின் சினிமா என்ற சாதனத்தை வைத்து ஒரு முயற்சி செய்தால் என்ன என்று செல்வராகவன் எடுத்த கரடு முரடான முடிவாய் ஆயிரத்தில் ஒருவன் பிறந்தான் போலும்.

கற்பனையின் யுக்தியை சக்தி வாய்ந்த காட்சிகளின் மூலம் சொன்னால் ரசிகர்களை கொஞ்சம் கண்கட்டி வித்தையில் மயக்கடித்தது போல் வசியம் செய்யலாம் என்று கிராபிக்ஸின் வரம் வேண்டி செய்த சிறு தவம் ஒரு புறம் இருக்க சோழன் வியட்நாமில் இருக்கும் மிங் ஹூ தீவில் வசிக்கிறான் என்று பாண்டியப் பெண் செய்யும் பழிப்படலப் பயணத்தின் கட்டங்கள் சிறுகுழந்தையை பயமுறுத்தி இருக்க வைக்கும் திகில் முயற்சிகளாய் தெரிகிறது.

இது என்ன வரலாற்று உண்மை என்று ஏடு புரட்டி நான் பார்க்கவில்லை. செல்வா அந்த ஆராய்ச்சியை செய்திருப்பார் என்று நம்பி சோழ மன்னன் மிங் ஹூ தீவில் இருந்தாலுமே, இவர்கள் பயணத்தின் ஏழு உயிர் விழுங்கும் பயங்கரங்களை சோழ மன்னன் செய்து வைத்துள்ளான் என்று சொல்லி அதற்காக உருவாக்கப் பட்ட சில காட்சிகள் இன்னும் சீரணிக்கப் பட இயலாமல் உள்ளன.

நிகழ்கால ஆத்மாக்களாய் கார்த்தி, ரீமா சென், அண்ட்ரியா, செய்யும் பயணம்தான் கதையின் 70% திரைச்சுருள் ஓட்டம் . சோழர்களின் அட்டகாசமான வியூகங்கள் என்றும் யாரும் புக முடியாத பயங்கரங்கள் என்று சோழர்கள் தமக்கு ஏற்படுத்திய பாதுகாப்பு மற்றும் போர்ச் சிந்தனைகளை காட்டிய செல்வா, சோழ மண்டலத்தின் அரசன் இன்னும் உயிரோடு உள்ளான் என்றும் அங்கே அவர்கள் பஞ்சத்தில் வாழ்கிறார்கள் என்றும் காட்டுவது போல் உள்ளது. தமிழர்கள் இவ்வளவு கருமை நிறம் வாய்ந்தவர்களா என்று எண்ணத் தோன்றுகிறது. தனது மிதமிஞ்சிய கற்பனையின் இன்னொரு பரிமாண ஈர்ப்பிற்காக, சினிமாவிற்காக, வண்ணம் பூசிய ஒரு கரும்படையாய் தமிழர்கள்.

அது போக அவ்வளவு யுக்திகள் செய்த சோழர்கள், பாண்டியப்பெண் ரீமா சென்னின் சதியில் ஏமாந்து போய் நவீன போர் கருவிகளின் முன் சின்னா பின்னமாகிறார்கள் என்பது போல் கதை முடியும் போது, அந்த பிரமாண்டமான வியூகங்களின் பின்னணியில் இருந்த சோழர்கள் பூ.. இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு ஒரு வித்தியாசமான யுத்தம் நடந்திருக்கும் படி செய்திருந்தால், படத்தின் சிறப்பாய் அது அமைந்திருக்கும். இவ்வளவு கடுமையான பயணம், இவ்வளவு கடுமைக்கும் பின், ஒரு சோழ அறிவு, வீரம் என்று ஒரு போர் பட்டையைக் கிளப்பும் வகையில் இருந்தால் ஒரு பிரமாண்டமான உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும். படத்தின் உச்சகட்டம் திருப்தியை தந்திருக்கும்.

சினிமாவிற்காக சிந்திப்பது ஒரு தனித் திறமை. அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. அதனால், செல்வாவின் சிந்தனையை நான் குறை கூறவில்லை. அவரின் கற்பனைகள் முழுமையை தரவில்லை என்றே கூற வேண்டும். எதற்க்காக அந்த மந்திரக் காட்சிகள் என்று தெரியவில்லை. அதுதான் விஷயங்களை சிறு குழந்தைத் தனமாய் மாற்றுகிறது. யாதார்த்தம் என்று போனால் அதோடு போக வேண்டும். நம்ப முடியாத விஷயங்களை நம்பும் வகையில் சொல்ல வேண்டும். சொல்லும் விஷயத்தில் ஆணித்தரமான பின்னணி பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

சோழர்களின் சக்தியை, யதார்த்தத்தின் மேன்மையாய் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எந்த வித இயந்திரங்களும் இல்லாமலேயே, வெறும் மனித சக்தியால் வியப்பூட்டும் கோபுரங்களை எழுப்பியவர்கள் இன்னும் எவ்வளவோ சக்தி கொண்டவர்களாய் இருந்திருக்கலாம் என்று வேறு வகையில் சிந்தித்து, காட்ட வந்த பயங்கரத்தை காட்டி இருக்கலாம். கிராபிக்ஸ் ஆங்காங்கே இன்னும் சிறப்பாய் அமையாமல் கொஞ்சம் ஒரு செயற்கைத் தண்மையுடன் காட்சி தருவது தெரிகிறது. சில இடங்களில் green screen effects studio -வில் இருக்கக் கூடிய ஒரு உணர்வைத் தருகிறது.

இவர்கள் செய்த முயற்சியின் உருவம் பெரியது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் அதற்காக இந்தக் குழுவையும், தயாரிப்பாளரையும் பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக ஒளி ஓவியரின் பனியின் சிரத்தை ஆங்காங்கே ஒளிர்கிறது. பாலைவனங்களை காட்டும் போது கொஞ்சம் (overexposure technics ) வெளிரும் தண்மை உஷ்ணத்தின் உணர்வை அதிகரிக்க மற்றும், பார்த்திபன் வசிக்கும் குகை மண்டபம் போன்ற இடங்களில் உள்ள ஒளியமைப்புக் கலை, போன்றவை நன்கு இருந்தது. மிக அதிகமான கோணக் குளறுபடி இல்லாமல், யதார்த்தத்திற்கு ஏற்றது போல் தன காட்சியின் தண்மைகளை ஒழுங்கு செய்தது நன்று. (Night effects ) இரவுக் காட்சிகள், கொஞ்சம் நீல வண்ணத்தை குறைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்ற உணர்வு.

கலைஇயக்குனரை பாராட்டி ஆக வேண்டும். மிகவும் சிரத்தையுடன் பணியாற்றியுள்ளார். ஒப்பனைக் கலைஞர் பணியும் நன்கு அமைந்திருந்தது. அவருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருந்தார். இயற்க்கைக்கு மாறுபட்ட மனிதப் பூச்சுக்கள் இருந்தாலும், இயக்குனர் கேட்டதை அவர் ஒழுங்காகச் செய்திருந்தார்.

G . V. பிரகாஷின் இசை படத்துடன் இயைந்து இருந்தது. பாடல்கள் ரசிக்கும் படியாய் இருந்தது.

நடிகராய் கார்த்தி பரவாய் இல்லை. அவருடைய பழைய மேனரிசம் இந்தப் படத்திலும் ஒட்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் அவரது உடல் வாகை கவனிக்க வேண்டும். கொஞ்சம் சுதப்பலா உள்ளது நண்பா. ரீமா சென் மற்றும் அண்ட்ரியா அவர்கள் பணியை ஒழுங்காய் செய்திருந்தனர். கொஞ்சம் வித்தியாசமாய் முயல்வோம் என்று, அந்த பயணத்தில் அவர்கள் பேசும் வசனங்கள், ஒருவருக்கொருவர் காட்டும் ஈடுபாடு என்று செல்வா செய்த ஒற்றை வசன ஆங்கில முயற்சி பரவாயில்லை.

எதிர்பார்த்த படி ஆயிரத்தில் ஒருவன் ஓஹோ என்று கிடையாது என்பதை பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது சரிதான். ஏன் அந்த உணர்வு ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பதை செல்வராகவன் ஆராய வேண்டும். வித்தியாசமாய் முயன்ற உங்களுக்கு பாராட்டு உண்டு செல்வா ஆனால் கதையின் பாத்திரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று தேவை இல்லாமல் முண்டிக் கொண்டிருந்த ஒரு தண்மை எல்லாப் பாத்திரங்களையும் ஒரே நிலையில் காட்டியது, அது அவர்களின் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்தவில்லை. படம் எப்படி இருந்தாலும் பாடல் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுக்க முடியாது என்ற பார்முலா இதிலும் உள்ளது. ஒரு சீரியசான பயணத்தில் இது தேவையில்லை என்பது ஏன் உணர்வு. பார்த்திபன் தன் பாத்திரத்தை மிக நன்றாக செய்திருந்தார்.

செல்வா, உங்கள் இளம் வயதில் நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பாராட்டியாக வேண்டும். ஒரு செயல் அதன் விளைவு பின் திருத்தல் புதிய அனுபவம் இதுதான் வாழ்வியல். அது கலைக்கும் பொருந்தும். ஆகையால் வாழ்த்துக்கள். நாங்கள் c டைப் ரசிகர்களைக் கவரவேண்டும் என்று கொச்சைப் படுத்தும் சில முயற்சிகளை விட்டுவிட்டு, நம் கலாசார வட்டத்துக்குள் நல்லதை செய்யுங்கள். புதிய எண்ணங்கள் புதிய நடைமுறைகளை பலன்தரும் பாங்கில் கொண்டு வர, கலை ஒரு பெரிய ஊடகச் சக்தியாய் அமைவது என்பதை மனதில் கொள்ளுங்கள்!

ஆயிரத்தில் ஒருவன் என்ற முயற்சிக்கு வாழ்த்துக்கள். அவன் வந்து போனான் என்ற உணர்வு உள்ளது. மனதில் நிற்காத சில சலனங்களுடன் ஆயிரத்தில் ஒருவனாய் சென்றும் விட்டான்.

Saturday, February 6, 2010

ஒளி ஓவியர்கள் சினிமாவின் மூச்சு...

சினிமா என்பது பல சிறந்த கலைகளை உள்ளடக்கியது. எல்லாம் ஒவ்வொரு விதத்தில் சினிமாவின் தனித்தண்மைக்கு உதவி புரிந்தாலும் சினிமடாக்ராபீ அல்லது ஒளி எழுத்தாளர்கள், அல்லது ஒளி ஓவியர்கள் அல்லது கேமராமேன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தக் கலைஞர்களின் பங்கு மிக மிக முக்கியாமாகிறது. கதைகளையும், கருத்துக்களையும் எழுத்தாளர்கள் சிந்திப்பது போல சிந்தித்து, இயக்குனரின் சிந்தனைகளை தத்ரூபமான காட்சிகளாய் கொண்டு வருவது என்பது இவர்களின் கையில்தான் உள்ளது. ஒரு சொல் திரையில் காட்சியாக வருகிறது என்றால், இந்தக் கலைஞர்கள் இல்லாமல் இயலாது. இரண்டு மணி நேரம் ஓடி முடிந்து விடும் ஒரு படத்தை எடுத்து முடிக்க மாதக் கணக்கில் ஆகும். சில படங்களை எடுப்பதற்கு வருஷம் கூட ஆகலாம்.


இவர்களின் பங்கு ஏன் அவ்வளவு முக்கியம் அல்லது சிறந்தது என்பது கூர்மையாக கவனித்தால்தான் தெரியும். எந்த வித பரிமாணமும் இல்லாத ஒரு மட்டமான திரையில், முப்பரிமாணத்திற்கு உரிய தண்மையை உருவாக்கும் இவர்கள் திறன் ஒரு ஓவியம் வரைவது போன்ற சிறப்புடையதாகும். ஓவியக் கலைஞரும் ஒரு ஒளி ஓவியரும் ஒரே முயற்சியில்தான் ஈடுபடுகிறார்கள். ஒரு காட்சியை அழகு படுத்துவதுடன், வெறும் திரையில் ஒரு தூரப் பரிமாணத்தையும், முப்பரிமாணத்தில் நாம் காணும் கட்சிகளை திரையில் அதைப் போலவே ஒளியாலும், நிழல்களை உருவாக்குவதாலும் முப்பரிமாணத்திற்கு அருகாமையில், நமது உணர்வுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட வேலையை கையாள்பவர்கள்.

உதாரணத்திற்கு, ஒரு நீண்ட சாலையின் விளிம்பில் சிறியதாய் ஒரு உருவம் நடந்து வருகிறது என்று எழுதி இருக்கும் காட்சி அமைப்பை ஒளி ஓவியர் எந்த நேரத்தில் படம் பிடித்தால் அந்தக் காட்சியின் அழகு கூடும் என்று எண்ணுவார். மேலும் அந்த நீண்ட சாலையை தனது காமெராவின் மூலம் எந்த வகையில் படம் பிடிக்கலாம் என்றும், அந்த காட்சியின் அழகு எந்தக் கோணத்தில் காட்டப்படும் போது, மக்களின் பார்வை வழியாய் மனதின் உள்ளுணர்வுகளில் எதிர்பார்க்கும் தண்மையை பெறவைக்க இயலும் என்றும் பல சிந்தனைகளின் பின் முடிவெடுத்து அக்காட்சியை இயக்குனரின் எண்ணங்களை திரை ஓவியமாய் படம் பிடிப்பார்.

இந்த சினிமாடாக்ராபீ என்ற கலையின் இன்னொரு முக்கியமான சிறப்பு அதை தொழில்நுட்ப மற்றும் கலைநுட்ப ஒருங்கினைவாய் செய்வது (Techno - esthetic art form) ஆகும். இந்தக் கலைஞருக்கு அறிவியல் சார்ந்த கல்வியும் கலை கண்ணோட்டமும் மிக அவசியம். ஒளி (knowledge of light properties ), ஒளியின் தன்மை (color temperature ) , ஒளியின் அளவு (intensity of light) , திரைச்சுருளின் வேதியியல் பண்புகள் (chemical properties of the film raw stock ), காமெராவின் இயந்திரப் பண்புகள் (mechanical properties of the camera , and lenses), ஒளிக்கருவிகள் (exposure control and measurement ) மற்றும் ராட்சஷ விளக்குகளின் பல பண்புகள் (giant lights) போன்றவை விஞ்ஞானத் துரையின் அறிவாகும். இவற்றை எல்லாம் சிறப்பாக கையாண்டு இவற்றின் மூலம் தன கலையுணர்வின் தனித்தன்மையை, இயக்குனரின் எதிர்பார்பிற்கேற்ப, கதையின் சிறப்பு கெடாமல் அற்புதமான காட்சிகளை கொண்டு வர ஒளி ஓவியர்கள் பிரயத்தனம் செய்கிறார்கள்.

ஒரு படத்தின் திரைக்கதை பல பக்கங்களில் இருக்கும். ஒவ்வொரு பக்கத்தின் நிகழ்வுகளும் பல காட்சிகளை படமாக்கி கோர்க்க வேண்டியதாய் இருக்கும். ஒவ்வொரு துளியாய் சேர்த்து சேர்த்து ஒரு திரைப்படம் நிறைகிறது. கதைகள் வெவ்வேறு விதமாய் இருக்கும். ஒவ்வொரு கதையின் கால கட்டம், அதற்க்கு எவ்விதமாய் காட்சிப் படபிடிப்பு, வண்ணத்தின் தன்மை, அது மனோதத்துவ ரீதியாய் நம் ஆழ் மனதில் ஏற்படுத்தும் உணர்வுச் சலனங்கள் என்று பல சீரிய ஆராய்ச்சிகளுக்குப் பின் அந்தக் காட்சியை படப்பிடிப்பு செய்கிறார் நம் ஒளி ஓவியர்.

உள்ளதிலேயே கடினமான தொழில் ஒரு ஒளி ஓவியரின் தொழில் என்றே கூற வேண்டும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் கூட, பல லட்சக் கணக்கில் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் பல இருக்கும். மிக மிக எச்செரிக்கையுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இந்தக் கலைஞர்களின் பொறுப்பில் விடப்படுகிறது.

இப்படிப்பட்ட கலைஞர்களின் சிறப்பு மெச்ச்சப்படவேண்டியதாகும். தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கும் ஒளி ஓவியர்கள் என மிகச் சிலரே உள்ளனர். எத்தனையோ கலைஞர்கள் இருந்தாலும் வித்தியாசமான ஒரு பங்களிப்பை தன் கலைக் கண்களின் மூலம் நமது கண்ணிற்கும் ரசனைக்கும் விருந்தளிக்கும் சிலரே சிறந்த கலைஞர்கள் என்ற பெயரைத் தட்டி செல்கிறார்கள்.

உலக ரீதியில் மிகச் சிறந்த ஒளி ஓவியர்கள் என்று பெயர் பெற்றவர்கள் இதோ!

விட்டோரியோ ஸ்டாரேரோ (Vittorio Storaro )
http://www.youtube.com/watch?v=pPhG4AxlbxY

ரோஜர் டீகின்ஸ் (Roger Deakins )
http://www.youtube.com/watch?v=agsj9pcUwLA

வெண் க்விஸ்ட் ( Sven Nykvist )
http://www.youtube.com/watch?v=CBHgY8S3OpI

வில்மஸ் சிக்மன்ட் (Vilmos Zsigmond )
http://www.youtube.com/watch?v=XUdifNdwO1g

கான்ரேட் ஹால் (Conrad Hall)
http://www.youtube.com/watch?v=mas4zNdBhzo

போன்றவர்கள் எல்லாக் கால கட்டங்களிலும் மிகச் சிறந்த ஒளி ஓவியர்களை பெயர் பெற்றவர்கள். இவர்களை போல் இதே வரிசையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

இந்தியாவின் சிறந்த ஒளி ஓவியர்களாய் பலரை காணலாம். மனதில் நின்ற சில மாற்றங்களை கலையில் கையாண்டு சிறப்பு பெற்றவர்கள் இதோ!

அசோக் மேத்தா (Ashok Mehta)
பாலு மகேந்திரா (Balu Mahendra )
அசோக் குமார் (Ashok Kumar )
ஷாஜி கருண் (Shaji N . Karun )
P .C ஸ்ரீராம் (P.C Sreeram )
சந்தோஷ் சிவன் (Santhosh Sivan)
மது அம்பாட் (Madhu Ambat )
கே.வி. ஆனந்த் (K .V . Anand )

இன்னும் பலர் இருக்கிறார்கள். சிறப்பு வாய்ந்த பணியாற்றி நம்மை ஆச்சர்யப் படுத்தியவர்கள். ஒரு நல்ல ஒளி ஓவியர் உருவாக கலையுணர்வு, ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்ற உந்துதல், நோக்கில் ஆக்கபூர்வம், அறிவுத்திறன், சீரிய சிந்தனை, போன்ற பல அடிப்படைகள் உள்ளன. அவற்றோடு தனது கலையை கையாளும் நேர்த்தியால் இவர்கள் சிறப்பு பெறுகிறார்கள்.

திரைப்படக் கலையின் ஒரு மிக உன்னதமான கலையடக்கங்களில் ஒளி ஓவியர்களின் பங்கு ஒரு தலை சிறந்த இடத்தை பெற, காகிதத்தில் எழுத்துக்களாய் குவிந்து கிடக்கும் எண்ணங்களை பிரமிப்பூட்டும் வகையில் நேர்த்தி மிகு காட்சிகளாய் தரும் அறிய காரியத்தை செய்யும் பணியே இவர்களை ஒரு படி உயர்த்தி விடுகிறது.

எல்லாக் கலைகளும் சிறப்புடையவைதான் ஆனால் ஒரு தொழில்நுட்ப மற்றும் கலைநுட்ப ஒருங்கினைவாய் இயக்கும் (Techno - esthetic art form) ஒளிப்பதிவு இயக்குனர்கள் கடமையும் பணிச்சிறப்பும் திரைப்படம் ஒரு காட்சி வழிக் கலை என்ற அடிப்படையில் அவர்களை மேன்மை படுத்துகிறது.

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பெயர் பெற்ற பலர் இட்ட வித்து பல புதிய சிந்தனை உள்ள இளம் ஒளி ஓவியர்களை உருவாக்கி தமிழ் சினிமாவின் பெயரை உலக ரீதியில் தலை உயர்த்திக் காட்டி உள்ளது. வரும் காலங்களில் இன்னும் வியக்க வைக்கும் கலா ஜீவிகள் வருவார்கள் என்பது நிச்சயம். தமிழ் திரைப்படக் கலையின் புகழை பரப்புவதற்கு முயலும், இன்றைய மற்றும் நாளைய ஒளி ஓவியர்கள் அனைவரையும் வாழ்த்துவோமாக!

முகில்

Wednesday, February 3, 2010

கந்தகோட்டை...

சாதாரணமான கற்பனை...சாதாரணமான முயற்சி... கதையை எப்படிச் செய்தால் விறுவிறுப்பு ஏற்படும் என்று முயன்று, ஒரு கருவை வைத்து வழக்கமான மசாலாவுடன் கட்டிய கோட்டை....

அஸ்திவாரம் அவ்வளவு ஸ்திரமாக இல்லை இயக்குனர் நண்பரே. உங்கள் முயற்சி பாராட்டத் தகுந்தது ஆனால் முத்திரை பதிக்கும் அளவு படத்தின் ஆற்றல் இல்லை என்பது என் பார்வை. படம் எடுப்பது சாதாரணமான வேலை இல்லை ஆனால் அந்த வாய்ப்பு இன்னும் நன்றாகப் பயன் படுத்தப் பட்டிருக்கலாம்.

காதலை பிரித்து வைக்கும் கதா நாயகன் , காதலை சேர்த்து வைக்கும் கதா நாயகி இவர்கள் சேரும் வரை ஓடும் கதை... அவர்கள் காதலில் விழும் போது வழக்கமான தமிழ் சினிமாவின் தண்டவாளத்துக்கு மாறுகிறது. ஏய்... என்று கத்தலும் கூச்சலும் உள்ள ஒரு மாமனித வில்லன் (சம்பத் குமார்- அண்ணாச்சியாக), அவரை சுற்றி ஒரு கும்பல், அந்த வில்லன் ஒரு சைகோ என்ற கற்பனை வழு வழு வந்த மரபே...

பொழுது போக்கு என்று ரசிக்கத்தக்க வகையில் காமெடியும் சில காட்சிகளும் இருந்தன என்பது உண்மை. அதே பாணியில் படத்தை கொண்டு போய், சில நல்ல விஷயங்களை சொல்லி மக்களிடம் சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பாணி வேறு தரம் கொண்டதாய் இருந்திருக்கும்.

முடிந்ததை பேசி என்ன பயன் என்று சொல்லலாம் ஆனால் அடுத்த முயற்சிக்கு முன் சிந்திக்கலாமே! சக்திவேல் (இயக்குனர்) மாறுபட்ட கருத்துக்களின் மூலம் மக்கள் மனதை கவர்வது அவசியம். உங்கள் எதிர்காலம் உங்கள் சிந்தனையில் உள்ளது. தொழில்நுட்பக் குழுவின் பங்கு ஓகே. சிறப்பு அம்சங்களாய் மனதில் நிற்கும் அளவு ஒன்றும் இல்லை.

நகுலன் (கதா நாயகன்) மற்றும் பூர்ணிமா (நாயகி) இருவருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. பூர்ணிமா தொடர்ந்து தன உடல்கட்டை, முக வசீகரத்தை பராமரிக்க வேண்டும். ஒரு சிறப்பு என்னவென்றால் பூர்ணிமா ஒரு கோணத்தில் ஸ்ரேயா போல் தெரிகிறார், சில நேரங்களில் அசின் மிக்ஸ், என்று ஒரு கலவை வசீகரம் உள்ளது.

கோட்டைக்குள் போகிறோம் என்று சென்ற வேகம் இல்லீங்க....கந்தக்கோட்டை ஒரு சின்ன மச்சு வீடுதானே .... ஏமாற்றி விட்டீர்களே!