Saturday, January 30, 2010

தமிழ்ச் சினிமாவின் புதிய பரிமாணங்கள்...

தமிழ்த் திரைப்படங்கள் மெல்ல மெல்ல காலத்தின் நியதியை கண்டு வருகிறது என்பதில் மகிழ்வடைகிறேன். முன்பு உள்ள சினிமாக்களின் அணுகுமுறை பிரபலமான முகங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மறுபடியும் மறுபடியும் அவர்களை மக்கள் மனதில் தெய்வத்துக்கு அடுத்த ஒரு இடத்தையும் கொடுத்து, அதில் முதலீடு செய்து தமிழ் படங்கள் ஒரு முதலாளித்துவ பாணியை வைத்ததை நாம் அறிவோம்.

T.R. மகாலிங்கம், p.u. சின்னப்பா, தியாகராஜா பாகவதர் காலம் மாறி, MGR, சிவாஜி, போன்றவர்கள் ஒரு தரம், S.S.R, ஜெய்ஷங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், போன்றவர் என்று கதாநாயகர்களில் அடுத்த படிக்கட்டு, அவர்களை சார்ந்து நகைச்சுவை நடிகர்கள், பின் வில்லன் நடிகர்கள் எனவும், கதாநாயகர்கள் விரும்பிய கதாநாயகிகள் என்றும் அவர்களை மட்டுமே நம்பி மூலதனம் செய்யும் தயாரிப்பாளர்கள் என்றும் திரைப்பட வட்டாரத்துக்குள் சாதரணமான மனிதர்கள் நுழைவது சற்றும் நினைத்து பார்க்க முடியாத காரியம்.
அது மட்டுமில்லை. இந்த கால கட்டத்தில் புதிய முயற்சிகளை எண்ணிப் பார்ப்பது என்பது இயலாத காரியம். நம் பார்முலா படங்கள் கதாநாயகர்களுக்கு மட்டுமே கதைகள் செய்வதும், அவர்கள் செய்வதை நம்ப வைப்பதுமாய் நம் படங்களும், அதை ரசிக்க நம் மக்களும் ஒரு வழிப் பயணமாய் இருந்தது...

சில படங்கள் சில நல்ல கதைகளை கையாண்டாலும், அவை கதாநாயகர்களை மையமாக வைத்தே இருக்கும் என்பதை பார்த்தால் புரியும். பொதுவாக அன்றிலிருந்து இன்று வரை கதைகள் ஹீரோக்களை பற்றியே பேசிவந்துள்ளன. நாம் அதை ரசித்து வந்துள்ளோம். இதை குற்றம் என்று சொல்லவில்லை என்றாலும், நம் கண்ணோட்டங்கள், நமது சிந்தனை, ஒரு குண்டு சட்டிக்குள் குதிரையாகவே ஓடியதாய் இருந்தது. இந்த காலகட்டத்தில், வித்தியாசமான கதையை மையமாக வைத்து, ஒரு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துப் போன கருத்துடன் திரைப்படங்களை அறிமுகம் செய்தவர் என்றால் அது பாலச்சந்தர் அவர்கள்தான் என்று சொல்ல வேண்டும். திரு கே. பாலச்சந்தர் அவர்களின் புதிய முயற்சிகளை மக்கள் இனம் கண்டாலும், அடுத்த தழுவிய காலகட்டத்தில் மறுபடியும் தமிழ் சினிமா கமல், ரஜினிகாந்த், என்ற இன்னும் இரண்டு ஹீரோக்களை தெய்வங்களாகி கொண்டது. திரைப்படம் எடுப்பது மக்களை ரசிக்கவைப்பதுடன் வியாபார ரீதியில் வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வை சார்ந்திருந்தது. அது தொன்று தொட்டு இருந்து வந்த தொழில் மந்திரம் என்றாலும், கலை என்ற அடிப்படையில் சமூக ரீதியாய் திரைப்படங்கள் பெரிய பரிமாற்றங்களை கொண்டு வரவில்லை. நல்ல கருத்துக்கள் கதைகளுக்குள் இருக்கும் ஆனால் ஹீரோக்கள் செய்யும் பயணத்தில் அக்கருத்துக்கள் மறைந்து போகும் அளவு அவர்களின் உருவம் பெரிதகியிருக்கும்.

திரைப்படத்துறைக்குள் நடிகர்களாய் போவது ஒரு விண்ணைத்தொடும் முயற்சி என்றால் தொழில் நுட்பக் கலைஞர்களாய் போவது ஒரு இமாலயப் பிரயத்தனம்.
அந்தக் காலத்தில் இது ஒரு மாயக் களமாய் மக்களின் பார்வைகளில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட ஜாலக் கூடமாய் இருந்தது.

திரைப்படங்கள் என்பது ஒரு தொழிற்சாலையாய் இயங்குவது ஆனால் பொதுமக்களோ, ஆர்வலர்களோ அருகில் செல்ல இயலாத ஒன்றாய் பிரத்யேகமான ஒன்றாய் இருந்தது.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் குழுவின் மூலம் உள்ளே நுழைந்த போது அது ஒரு மாற்றமாய் மட்டும் இல்லாமல் திரைபடத்துறையின் இயல்புகளையும் மாற்றியது. ஆபா, உதயகுமார் போன்றவர்கள் திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்தது புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களை திரையுலகம் பார்த்தது. இளைஞர்களாய் வந்தாலும், அவர்கள் எடுத்த படங்களும், வியாபார ரீதியாய் மத்துமே இருந்தன. மறுபடியும் பெரிய நடிகர்களை வைத்து இயக்கி, பணம் மற்றும் பெயர் செய்யும் யுக்திகள்தான் தொடர்ந்தது.

தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் கொண்டுவந்தார்கள் என்றால் அது திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றும் சொல்வது முக்கியம். ஒளிப்பதிவு, திரைக்கதைகள், அணுகுமுறை, படமாக்கும் விதம் போன்ற முயற்சிகளில் ஆர்வம் செலுத்தி திரைப்படங்களின் உருவை மாற்ற முயன்றார்கள்.

கதைக்களத்தில் பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்த முயற்சிகள் ரசிக்கும் படி இருந்தது, தமிழ் ரசிகர்களை வித்தியாசங்களை பார்க்க வைத்தது. புது முகங்களை அறிமுகப்படுத்தி கதையை ஹீரோவாக மாற்றிய பெருமை ஓரளவு இவர்களை சாரும் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.

இந்தக் கடந்த காலகட்டங்களில் மறுபடியும் மறுபடியும் எப்படியாவது பிரபலங்கள் திரைப்படங்களில் வியாபிதிருந்தார்கள். அந்த நிலையை மாற்றிய புதிய தமிழ்ப் படங்களை பார்க்க பார்க்க நான் அதிசயிக்கிறேன். காலச் சுழற்சியில் மாற்றங்கள் தானாக வரும் என்ற உண்மை தமிழ் திரை உலகை விட்டு வைக்கவில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தமிழ் படங்கள் கதை களங்கள் மாறியுள்ளன. இளம் சிந்தனை வித்தியாசமாய் புது விதைகளை விதைத்தது. மரபு சார் கதைகளில் இருந்து வித்தியாசங்களைப் பார்த்தது. முக்கியமான மாற்றமாய் யாரும் அறியா புது முகங்களை கதை நாயகர்களாய் அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் வெற்றியையும் தட்டியுள்ளது.

மக்களின் கண்ணோட்டம் மாறிவருகிறது, தலைமுறை, சந்ததி மாற்றங்கள் என்று திரையுலகமும் ரசிகர்களும் மாறியுள்ளார்கள்.

வியாபார நோக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மாற்றங்களை எண்ணும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், இயக்குனர்கள் வருகை தமிழ் படங்களின் சிறப்பை உயர்த்தி உள்ளது. அவர்களின் இந்த முயற்சி புதிய கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்க வசீகரமாய் இருந்த கதா நாயகர்கள் போய் ஒரு சாதாரண மனிதனாய் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மனித நாயகர்கள் தமிழ் திரைப்படத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடியாத ஒரு உண்மை. தமிழ் படங்களுக்கு இதுவே ஒரு புதிய பரிமாணம்.

இந்த பரிமாணம் நம் ரசனையை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போவதாய், வாழ்க்கையின் இயல்போடு நடை போடுவதாய் மாற்றியுள்ளது. கலையின் நிறைவு உண்மையோடு கலந்ததாய் இருந்தால் கலைக்கு பெருமை. அந்த முயற்சியில் ஈடுபட்ட, ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்த புதிய தலைமுறை படைப்பாளிகளின் வருகைக்கு வாழ்த்து சொல்லுவதுடன், அவர்களின் முயற்சிகளுக்கு சிகப்பு கம்பளம் இட்ட நல்ல தயாரிப்பாளர் உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

வாழ்க வாழ்க புதிய தலைமுறை எழுத்தாளர்களே ! புதிய தலைமுறை இயக்குனர்களே!

Tuesday, January 26, 2010

வாழ்த்துக்கள்! நற்பணி தொடரட்டும் பாலா...

இயக்குனராக வேண்டும் என்ற கனவு எத்தனையோ பேருக்கு உள்ளது. நான் நடிக்கத்தான் வந்தேன் ஆனால் இயக்குநராகி விட்டேன் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். இயக்குனராகிவிட்டாலும் கூட நல்ல கருத்துக்கள், சமுதாய அக்கறை உள்ள கதைகள், உணர்வு பூர்வமான அணுகுமுறை, கதை சொல்லும் பாங்கு போன்ற உயர்ந்த குணாதிசயங்கள் எல்லா இயக்குனர்களுக்கும் வந்துவிடுவதில்லை. நான் சேதுவில் சில காட்சிகளை பார்க்கும் போதே நினைத்தேன் நன்றாக முயன்றிருக்கிறார்கள் என்று. அப்போது இயக்குனர் யார் என்று நான் கேட்கவில்லை ஆனால் பாலா என்ற பெயர் மனதில் தங்கி இருந்தது. அண்மையில் நான் கடவுள் பார்த்த போது அதைப் பற்றி பாராட்டி ஒரு சிறு கருத்துப் பரிமாற்றம் பதிவு செய்திருந்தேன். அதில் கையாளப் பட்டிருக்கிற விஷயங்களை பாராடியிருந்தேன். இன்று பாலா ஒரு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்ற போது மிக்க மகிழ்வடைகிறேன். நல்ல விஷயங்களை பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் இன்னும் தேர்வுக் குழுவில் இருப்பது தெரிய வருகிறது. கலை என்பது, மொழி மற்றும் வாழ்விட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நல்ல தேர்வு உறுதி செய்திருக்கிறது. பாலாவின் தேர்வு இன்னும் நல்ல முயற்சிகள் செய்ய வளரும் இளம் உள்ளங்களுக்கு உரமாக அமையும். பாலா இன்னும் நல்ல திரைப்படங்களை உலகிற்குத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரைப்படக் கலையின் பரிமாணங்களை பாலா மேன்மேலும் ஆராய வேண்டும், புதிய முயற்சிகளை, கருத்துக்களை கையாள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ....

முகில்

Monday, January 11, 2010

ஈரம்


ஈரம் ஒரு வீரமான முயற்சி. புதுமுகங்கள், பழைய கதைக்களம், நவீனம், நல்ல பார்வை இம்முயற்சியை திருவிணையாக்கி உள்ளது. திரைப்படத்தின் ஆணிவேர் நல்ல திரைக்கதை. அதை இதில் ஓரளவு புரிந்து செயல் படுத்திய விதம் விவேகம்!

ஆவிகள் உள்ளது என்பது காலா காலமாய் நாம் கேட்டு பயப்பட்ட விஷயம். ஈரத்தில் உள்ள ஈர்ப்பு ஆவியே! ஷங்கர் தயாரிப்பாளராய் பணம் போடுகிறார் என்றல் சும்மா இல்லியே! ஆவி பணத்தை தரும் என்ற நம்பிக்கைதான்! அறிவழகனின் அறிவழகில் உள்ள ஈரம் பதமாக ஒரு படமாக வந்து பலரையும் பேசவைத்துள்ளது! வாழ்த்துக்கள் டீம்!

கல்லூரிக்காலம், காதல் ஈர்ப்பு, வாழ்க்கை முறை, பண்பாடு, எண்ண முரண்பாடு என்று வாசு-ரம்யா காதல் பிரிய, வாழ்க்கை பாலகிருஷ்ணன் என்ற ஒரு வரனை அறிமுகப்படுத்துகிறது ரம்யாவின் வாழ்வில்! மனரீதியாய் பாலா ஒரு தர நிர்ணய வரைமுறை உள்ளவன் ! அவன் வகுத்த தரம் மாறிவிட்டால் ஏற்றுக்கொள்ள இயலாதவன். எதிலும் களங்கம் இல்லா புதுத்தனம் நாடும் பாலாவிற்கு ரம்யா ஏற்கனவே இன்னொருவனால் காதலிக்கப்பட்டவள் என்ற உண்மை தெரியவர உள்ளூர வெறுப்படைகிறான். ரம்யாவின் மீது வெறுப்படையும் சில காலனிக்காரர்கள் பரப்பிய வதந்தி, ரம்யாவை கொலை செய்ய வைக்கிறது. பாலா கொலை செய்துவிட்டு அதை தற்கொலை என்று உலகை நம்ப வைத்துவிட்டு தான் சாதாரண வாழ்க்கையை அமைத்து கொள்ளும் போது ரம்யாவின் பழைய காதலன் வாசு ஓர் போலீஸ் அதிகாரியாய் வந்து உண்மையை விசாரித்து நடந்தது கொலை என்று நிரூபிக்கிறார்.

அபாண்டமாய் கள்ளக்காதல் பழி சுமத்திக் தன்னைக் கொலை செய்த கணவனையும், அதற்க்கு காரணமான சிலரையும் ரம்யாவின் ஆவி பழி வாங்குகிறது.

திரைக்கதை தண்ணீர் போல் விசையுடன் ஓட நமக்கு அது அழகாக தெரிகின்றது. அறிவழகனின் படகை ஓட்டிச்செல்லும் ஒளி ஓவியர் மனோஜ், கலையாளர், மற்றும் இசை ஓவியர் தமன் தகுந்த பலம் கொடுத்துள்ளது அழகு! நடிப்பில் ஆதி, நந்தா மற்றும் சிந்து மேனன் நல்ல முயற்சி செய்துள்ளனர்! பாத்திரப்படைப்பு என்பது ஒரு எழுத்தாளனின் பார்வை. அவன் ரசித்த சில பாத்திரங்கள் இப்படத்தில் உயிர் பெற்றுள்ளது ரசிக்கும் வகையில்.
நமது வாழ்வில் நாம் நமக்கு வைத்துக்கொள்ளும் வரைமுறைகளை எல்லையாக்கி மற்றோரை அப்படியே எதிர்பார்ப்பது தவறு என்ற ஓர் கருத்தை இப்பாத்திரங்கள் கூறுவதும், நம் வாழ்க்கையில் உள்ள குறைகளை மறைக்கப் பழி போடுவதால் ஏற்படும் துயரத்தையும் இந்தக் கதையின் ஒரு வேர் தாங்குகிறதைப் பார்த்தேன்.

தரமான படைப்பை தர வேண்டும் என்ற உந்துதல் தெரிகிறது. அதை பாராட்ட வேண்டும். சமூகத்தில் நடக்கும் சில விடயங்கள் அப்படியே படமாவதன் மூலம் ஒரு மட்டத்தில் இருந்து பார்க்கும் ஒரு தலைமுறைக்கும் மறு மட்டத்தில் உதிக்கும் இன்னொரு தலைமுறைக்கும் உள்ள இடைவெளி அங்கலாய்ப்பை அளிக்கவும் செய்கிறது. சில காட்சிகள் இளம் வயதினரின் உள்ளங்களை பாதிக்கலாம்.


நிறைவேறாத காதலின் வலியை ஈரம் மென்மையான உணர்வாய், காதலுக்கு இருக்கும் ஒரு மதிப்பாய் வாசுவின் மூலம் கொண்டு வந்து தன் காதலி களங்கமற்றவள் என்று வாசுவை உணர வைத்ததை அவன் வாயால் மதிப்புடன் சொல்லி இருக்கலாம். ஈரம் இல்லாத காதலன் போல் வாசு ரம்யாவின் காதலை தூக்கி எறிந்ததும், அவள் இறந்த பின்னும் பத்திரிக்கை செய்தியை காண்பித்து ரம்யாவின் ஆவியிடம் 'இப்ப என்ன பெயர் கிடைச்சிருக்கு தெரியுமா என்று கேட்டு "கள்ளக்காதல்" என்று போலீஸ் தனமாக கேட்பதும் வாசுவின் பாத்திரப்படைப்பில் ஒரு பலஹீனம் போல் தெரிந்தது. வாசு சில நல்ல வார்த்தைகளை கூறி தனியே நடந்து போவது போல் படத்தின் கடைசி காட்சி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாசு அப்படி போக, மறு புறம் சிகப்பு குடை, கசியும் பெட்ரோல்... என்று தொடரும் குரோதம்...

சினிமாத் தனம் என்று சொல்லக்கூடிய விஷயங்களாய் சில வசனங்கள், காட்சிகள் என்று ஆங்காங்கே தெரிந்தாலும் கதையின் மூலம் சொல்ல விரும்பிய உணர்வு, நல்ல முயற்சியுடன் வெளிவந்துள்ளது. அது எதிர்பார்க்கப்பட்ட விடையை அளிக்கிறது. பார்ப்பது சினிமா என்ற உணர்வின் மேல் நம்மை உட்கார வைத்து கூட்டி சென்று இப்பயணம் ஒரு பயம் தரும் பாத்திரங்கள் அடங்கியது என்று சொல்லும் இந்த குழுவின் முயற்சி நன்று!
ஈரத்தின் தீரத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!
முகில்