Sunday, April 26, 2009

A.R. ரஹ்மான் தொட்டிருக்கும் இமயம்

ஆஸ்கர் விருது திரைப்பட வட்டாரங்களில் மிகப் பெரியதாக சொல்லப்படும் ஒரு சிகரம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு ஆஸ்கர் வாங்கி வந்திருக்கும் A.R ரஹ்மானைப் பாராட்டாத உள்ளங்கள் இருக்க இயலாது. அவரை திலிப் என்ற பெயரில் ஒரு சில விளம்பரப் படங்களின் தயாரிப்பின் போது பார்த்த போதே அவருள் ஒரு சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஏன் இந்திய மற்றும் உலக திரைப்பட வரலாற்றில் கூட A.R. ரஹ்மான் பெயர் பொறிக்கப்பட்டது இந்தியர்கள் பலர் பெருமைப் பட்ட விஷயம். அவர் ஒரு தமிழர் என்கிற போது தமிழ் நாட்டு மக்களுக்கு, தன் வீட்டுப் பிள்ளை ஒரு பெரிய விருதை வாங்கி வந்தது போல் பெருமை என்றால் அது மிகையாகாது.

இசைக்கு ஏது மொழி என்பதை கோடம்பாக்கத்தில் இருந்து சென்று, ஹாலிவுட் இசை நிபுணர்களை சற்றே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நமது ரஹ்மான். இந்தியாவை ஒட்டி உள்ள ஒரு கதை என்பதால் ரஹ்மான் ஓகே என்று சிலர் எண்ணினாலும், இனி ஹாலிவுட்-ம் ரஹ்மானை அழைத்து தக்க வைத்துக் கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை.


இசை வரலாற்றில் தனக்கென்று ஒரு பாணியை வளர்த்துக் கொண்டவர்கள் எவ்வளவோ பேர் உண்டு என்றாலும் உலகளாவிய வகையில் இசை இமாலய சிகரத்தில் ஏறிய இந்திய இசைக் கலைஞனாய், இசை வானில் என்றும் மறக்க முடியாத துருவ நட்சத்திரமாய் ஒளி வீசும் A.R. ரஹ்மான் மேன் மேலும் சிறப்பு பெற வாழ்த்துகிறோம்.


A.R. ரஹ்மான் இட்டிருக்கும் இந்த வித்து இனி அவர் போல் பலரும் பயணம் செய்ய காத்திருக்கும் பலருக்கு ஒரு ஞான விருச்சமாய் நிழல் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது....


ஜெய் ஹோ ரஹ்மான்!


முகில்

Monday, April 20, 2009

வெண்ணிலா கபடி குழு ...மெல்லிய உணர்விழை

சராசரி வாழக்கையின் உன்னதங்களின் ஒரு பொலிவு வெண்ணிலா கபடி குழு. இயல்பான போக்கில் செல்லும் வாழ்க்கையில் உள்ள சிறந்த உணர்வு பரிமாற்றங்களை தான் உணர்ந்த விதத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

எல்லா வாழ்க்கையிலும் இழை போல் ஓடும் காதல், அது செய்யும் மாயம், உணர்வுகளின் புனிதம் என்று ஒரு அழகான கொச்சை படுத்தாத காதலாய் மாரியின் காதல். திருவிழாவிற்காக வரும் கதா நாயகி முதல் முதல் பார்த்து விரும்பிய ஒருவனை காதலனாக ஏற்கிறாள். சில நாட்களே அந்த கிராமத்தில் இருந்து விட்டு தன் காதலனை விட்டு செல்கிறாள். மறு முறை திருவிழாவிற்கு வரும் போது சந்திக்கலாம் என்று இதயத்தின் பரி பாஷைகளுடன் சென்றவள் மறுபடி வருகிறாள். காதலனை தேடுகிறாள். காதலன் இறந்து போன விஷயம் தெரியாமல் கலக்கத்துடன், குழப்பத்துடன் ஒவ்வொரு இடமாய் தேடி அவனைக் காணாமல் ஊர் திரும்பும் போது கல்லான மனதிலும் கண்ணீர் வரும்.

காதலின் புணிதமான தேடலாய் இந்த இளம் காதல் வரும் போதெல்லாம் வயதானவர்களை கூட தம் வாழ்வின் பழைய நாட்களுக்கு சென்று தாம் செய்த முதற் காதலின் புணிதத்தை உணரும் அளவிற்கு ஒரு வெளிப்பாடு இந்த காதலின் மூலம் வருகிறது .

பழனியில் வாழும் மாரி, மதுரை சென்றும் தன் காதலியை காணாமல் கபடியில் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கொள்வது சோகமான விஷயம். இது உண்மையில் நடந்ததா சுசீந்திரன் அவர்களே? இல்லை just கற்பனையா?

கபடிதான் கதை என்றாலும், கபடி ஆடும் அந்த ஊர் வாலிபர்கள் மத்தியில் உள்ள சமூக சாயங்கள், எப்படியாவது செயிச்சு போடனுமுடே என்ற வேகம், தோற்றுக்கொண்டே வரும் அவர்களை ஏசும் கிராமம், மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள், சாதி உணர்வின் குழப்பங்கள் என்று பல விஷயங்களையும் கதா பாத்திரங்கள் செல்லும் இயல்பு வாழ்க்கை மூலமாக சொல்கிறது வெண்ணிலா கபடி குழு.


இந்த மாதிரிப் படங்கள் தமிழ் பட முத்திரைகள் என்று சொல்லலாம். தமிழ் படங்களுக்கே உரித்தான பாடல், சண்டை இருந்தாலும், கதையோடு ஒட்டி போய் சொல்லும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்.

சொல்லப்படும் கருத்து, கதையின் அமைப்பு, இந்த team work என்ற மந்திரம், தாம் சொல்ல வந்ததை அழகாக சொல்லும் பாங்கு என்று வெண்ணிலா கபடி குழு நன்றாக மனதுடன் விளையாடுகிறது.

செல்வ கணேஷ்-ன் இசை கதையுடன் இசைப்பது நன்று. கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செவ்வனே பணியாற்றியுள்ளனர். வழக்கமான SFX filter முயற்சிகளை குறைத்து, காண்பதை நன்றாக படமாக முயற்சி செய்தது நன்று.

சுசீந்திரன் ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் திரைப்பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துவதுடன், தன் பயணத்தின் மைல் கற்களாய் நல்ல கருத்துள்ள திரைப்படங்களையே அவர் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுவதுடன் அன்பு ஆணையும் இடுகிறோம்....

வெண்ணிலா கபடி குழுவுக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

முகில்

Friday, April 17, 2009

தரமான தமிழ் சினிமா


சினிமா பொதுவாக நம் எல்லோர் மனதையும் கவரும் கனவு வாழ்க்கை. குறைந்த பட்சம் 80 % மக்கள் சினிமாவை தம் வாழ்க்கையோடு இணைத்து கொண்டவர்கள். சிலருக்கு சினிமாவே வாழ்க்கை. சிலருக்கு அது ஒரு வழிகாட்டி. சிலருக்கு பாடம். சிலருக்கு ஜஸ்ட் பொழுதுபோக்கு . சினிமா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கூட கேட்கத் தோன்றும். மனிதர்கள் போல் சினிமாவும் வெவ்வேறு விதங்களாய் வருகிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனித மனங்களை கவரும் இந்த கலை மிக அற்புதமானது. எத்தனையோ கலை வடிவங்கள் இருந்தாலும், சினிமா ஒன்று மட்டும் எல்லாக் கலை வடிவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெருங்கலையாக உள்ளதை எண்ணிப்பார்த்தால் வியக்கத் தோன்றும். சினிமாவின் வளர்ச்சி மாறிக் கொண்டே வந்து நவீன கம்ப்யூட்டர் யுக்திகளையும் கொண்டு இப்போது சினிமாவில் செய்ய இயலாதது என்று எதுவும் கிடையாது என்பதை அழகாக சொல்லி சினிமா நம் அனைவருக்கும் கனவுலக சஞ்சாரம் செய்ய டிக்கெட் தருகிறது .

நம் மனதின் உணர்வுகளை நாம் செய்ய முடியாததை அல்லது நாம் செய்த ஒன்றை அல்லது கற்பனை பொழிவுகளை கதை வடிவில் நல்ல ரசனை உணர்வுடன் வெளிக் கொண்டு வருகையில் அந்த கற்பனை வடிவுடன் நல்ல தொழில் நுட்பம் சேர்ந்து சினிமா கலை வடிவங்களின் முடி சூடா மன்னன் போல் திகழ்கிறது.

சினிமா அதன் பின்னணியில் தன் உயிர் நாடியாய் சிந்தனாவாதிகளை கொண்டுள்ளது. தொழில் நுட்பத்தின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு சினிமா என்றால் அது மிகையாகாது. மனிதனின் கற்பனாவளம் விஞ்ஞானத்தின் இச்சிறந்த கண்டுபிடிப்பில் கதைகளை கொண்டு சென்ற போது சினிமாவிற்கு கிடைத்த புதிய பரிணாமம் நாம் இன்று வரை அதை எங்கெல்லாமோ கொண்டு செல்ல வழி வகுத்தது.

சினிமாவிற்குள் ஓர் படைப்பாளியாய் வருவதற்கென்று எல்லாரும் வந்தாலும், பலரின் உந்துதல் சினிமாவை ஒரு பணம் பெருக்கும் வியாபாரக் கருவியை மட்டுமே இயக்குவதாய் உள்ளது. எப்படியாவது ஒரு கதையை சொல்ல வேண்டும். ரசிகர்கள் இததான் ரசிப்பார்கள் என்று அரை வேக்காட்டுத்தனத்துடன் ஏதாவது ஒரு கதையையும் கற்பனையையும் கொண்டு வரும் கதாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை சினிமாவும் சரி மக்களும் சரி புறக்கணித்து விடுவதை நாம் கண்கூடாக கண்டாலும் இன்னும் பலர் அந்த விக்கிரமாதித்த முயற்சியில் பலவந்தமாக இறங்கி தண்டனை அடைகிறார்கள்.

ஒரே கதை, இல்லை கொஞ்சம் மாற்றுவோம் அண்ணே... என்று பேருக்கு எதாவது மாற்றி வடைகறி போல் கதை செய்யும் கூட்டங்களை தமிழ் சினிமா விட்டால்தான் உலக அரங்கில் தமிழ் படங்களும் அதன் படைப்பாளிகளும் தவழ முடியும். தமிழன் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்று டாம்பீகமாய் பறை சாற்ற முடியும்.

மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அண்ணே என்று கதை சொல்ல கூடாது அண்ணே. ஜனரஞ்சக சினிமா எடுப்பதற்கு கொஞ்சம் புதிய கதைகளை கையாளுங்கள். புதிய ரசனைகளை உள்ளத்தை தொடும் வகையில் கதைகளாக்குங்கள். நாலு பாடல்கள், நாலு பைட், சும்மா அதிரும் அண்ணே என்று அல்வா கொடுத்தால் என்ன ஆகும்? போகப் போக ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளின் கதையாய் அழுகி அலுத்துத்தான் போகும்.

தமிழ் சினிமா மாற வேண்டும். தமிழ் மக்கள் இன்னும் விசில் அடித்துக் கொண்டு பூக்களையும் வண்ணக் காகிதங்களையும் எரிந்து அசுத்தப் படுத்தும் கூத்தை விட்டு விட்டு, வேறு வகையில் வரும் சினிமாக்களை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளையும் இயக்குனர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

தமிழின் தரம் உலகம் அறிய வேண்டும்...தமிழ் சினிமா இயக்குனர்கள் செய்யும் சிறு முயற்சிகளை இன்னும் பலப் படுத்த வேண்டும்.....

வாழ்க தமிழ்.... வாழ்க தரமான தமிழ் சினிமா!

முகில்

Monday, April 13, 2009

நான் கடவுள் பற்றிய கருத்துகள்


அன்பர்களே

நான் கடவுள் அப்படத்தை பார்த்தவர்கள் மனதை நெகிழச் செய்திருக்கிறது. சிலர் கூறிய கருத்துக்கள் இங்கு உள்ளன.

கிருஷ்ணா
இது என் சங்கப்பலகை
ராமசாமி நல்லமுத்துப்பிள்ளை
MK. Preetha
ஆகியோர் கருத்துக்கள் ....இதோ கீழ் இருக்கும் link-ல் !

https://www.blogger.com/comment.g?blogID=6795831769841907029&postID=866320196563258383&isPopup=true

உங்களின் கருத்துக்களை வெளியிட follow என்றிருக்கும் தொடர்பை கிளிக் செய்யவும். gmail அல்லது yahoo மூலமாக sign-in செய்து உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்

நன்றியுடன்
முகில்

Sunday, April 5, 2009

2000 ரூபாய் முதல் பரிசு


நீங்கள் சிறந்த திரைப்பட ரசிகரா?
நீங்கள் நன்றாக சிந்தனை செய்பவரா?
நீங்கள் திரைப்படங்கள் மீதான உங்கள் சிந்தனையை நன்றாக எழுதக் கூடியவரா?
கீழ் கண்ட இணைய தளத்தில் சேர்ந்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துக.

உங்களில் சிறந்த சிந்தனையாளருக்கு, சிறந்த எழுத்தாளருக்கு ரூபாய் இரண்டாயிரம் பரிசு காத்திருக்கிறது.

போன வருடத்தில் வந்த சிறந்த படங்களில் ஐந்தை தேர்ந்தெடுத்து அவை சிறப்பான படங்கள் என்பதற்கான உங்கள் கண்ணோட்டத்தை எட்டு வாக்கியங்களுக்குள் எழுதி படங்களை டாப் five ஆக வரிசை படுத்த வேண்டும்.

தமிழ் படங்கள் உலக ரீதியாக சிறப்பு பெற மேலும் என்ன வகையில் வாய்ப்புகள் உண்டு? யாரிடம் அந்த பொறுப்பு உள்ளது என்றும் ஒரு சிறு கட்டுரை எழுத வேண்டும். ௨000 வார்த்தைகள் வரை அமையலாம்.

உங்களில் சிறந்த எழுத்தாளர் 2000 ரூபாய் பரிசாக பெறுவார். நீங்கள் http://www.tamilfilmcritic.blogspot.com/ -ல் உறுப்பினராக சேர்ந்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

Join www.tamilfilmcritic.blogspot.com and start writing. Express your talents today!

நீங்கள் எழுதிய பின் ஒரு email அனுப்பவும்: tamilfilmcritic@gmail.com என்ற முகவரிக்கு. உங்கள் முழு பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண் போன்ற விபரங்கள் எங்களுக்கு வந்தால்தான் முதற் பரிசை உங்கள் இல்லத்திற்கு அனுப்பலாம்.

நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

முகில்

Saturday, April 4, 2009

"தீ" எரிவது போல் தெரியவில்லை...




நிர்வாணமாய் சுந்தர். சி ஆண்டி கோலத்தில் வருவதை எப்படி நியாயப் படுத்தலாம் என்று இயக்குனர் செய்த முயற்சி, அரசியல்வாதியாய் மாற சுந்தர். சி செய்யும் வழக்கமான திடுக் திருப்பம் என்று ஓர் வழக்கமான தமிழ் படம்.

போலீஸ் நாட்டிற்க்கும் மக்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. அரசியல்வாதிகளின் அடாவடித் தனத்தை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக கதாநாயகன் சுந்தர் சி எப்படி ஒடுக்குகிறார் என்று காட்டும் மசாலாத் தீ அவ்வளவு இதமாக இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிடிப்பில்லாமல் போகிறது. திரும்ப திரும்ப வந்த கதை போல் இருப்பதால் இதுதான் நடக்க போகிறது என்று ஓரளவு செய்யும் நம் ஊகம் சரியாக செல்கிறது.

இன்ஸ்பெக்டர் ஆக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளால் தாக்கப் பட்ட பின் குடும்பத்தையும் இழக்கிறார். மறுபடி அரசியல் வாதியாய் மாறி பழி வாங்க வரும் சுந்தர் சி சந்தனம் குங்குமம் பூசி கொண்டு அதே முகம் மேக் அப்புடன் வருவது அப்பட்டமான தவறு. அவரை பார்த்தால் அப்படியே தெரிகிறது பழைய இன்ஸ்பெக்டர் என்று. அவரது எதிரிகளுக்கு எப்படி தெரியவில்லை என்று எனக்கு புரிய வில்லை.

மறுபடி மறுபடி கதையை கொண்டு செல்ல இயக்குனர், முயற்சி செய்திருக்கிறார். படம் எடுப்பதற்கு கதை ஒன்று வேண்டும், எந்தக் கதையை சொல்லி எந்த தயாரிப்பாளரை பிடிப்பது என்பதற்கு ஒரு திறமை இருந்தால் போதும் என்ற முறையில் இந்த படம் நாம் ஏற்கனவே பார்த்த இட்லி சாம்பார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை ரசிக்கும் படி இருந்தது. நடிப்பிற்கு ஒன்றும் பெரிய வாய்ப்புகள் இல்லை. அரசியல் வாதி ராம பாண்டியன் நல்ல முறையில் நடித்திருக்கிறார்.

சுந்தர் சி இன்னும் நடனப் பயிற்சி எடுத்தால் நல்லது. இடுப்பு கொஞ்சம் வளைந்து பாவங்களை கூட்டலாம். புது கதாநாயகி மலேசியா ரம்யா-விருக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம், நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஈடு பாடு இருந்தால்!

வேறு ஒன்றும் பெரிதாக சொல்வதற்க்கில்லை. தீயின் சூடு அவ்வளவாகத் தெரியவில்லை.

Thursday, April 2, 2009

திரைப்படத்தின் போக்கு...

மனிதர்கள் மாறுகிறார்கள். அதே போல் மனிதனிடம் உருவாகும் ரசனையும் மாறுகிறது. திரைப்படத்தின் வரலாறு அதில் இருந்து விதி விலக்கல்ல. படம் முழுதும் பாடல்கள், மெல்ல ஆறுதலாகப் பேசி கவலையை போக்க நையாண்டி, கதை அம்சம் என்று தொடங்கிய தமிழ் படங்கள் மக்கள் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளுடன் சமூக நன்மையையும் மனதில் கொண்டு கதை காட்சிகளை கொண்டிருந்தன. படங்கள் நாளாவட்டத்தில் மாறி தற்போது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் காட்டலாம் என்று வந்து விட்டன. மனிதன் மாறி உள்ளான். திரைப்படங்களும் மாறி உள்ளன என்று நாம் அப்படியே போனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு நம்மை கேட்க்கும். நமது கலாச்சாரம் எங்கு போனது என்பதுதான் அது. ஆனால் கலாச்சாரத்தை பற்றி யார் கவலைப்பட? மனிதன் மாறி விட்டான். கலாச்சாரம் மாறத்தானே செய்யும். நமது கால கட்டத்தில் உள்ள பெரியவர்களுக்கு நாம் செய்வது சரியல்ல என்று தோன்றும். நமது சந்ததி செய்வது நமக்கு கசக்கும். இதற்க்கு முடிவுண்டா? நமது கலா ரசனையும் வெளிப்பாடும் நாளைய சமுதாயத்தில் நல்லவை நடக்க வழி கோலுமேயயாயின் அதுவே சிறந்த வெளிப்பாடு. உணர்வு. ஆனால் இன்றைய சமுதாயம் வியாபார எண்ணத்தில் மக்கள் உணர்வுகளின் ஸ்திரம் இல்லா தன்மையை சாதகமாக்கி கலை என்ற பெயரில் திரைப்படங்களில் புகுத்துவது சரியா என்று தோன்றவில்லை. எது கலை? எது நமக்கு தேவை? சராசரி மனிதனால் இதற்க்கு பதில் சொல்ல தெரியாது. அதில் அவனுக்கு ஆர்வமும் கிடையாது. கலைஞர்கள் அல்லது சிந்தனைவாதிகள் சொல்வார்களா?

முகில்

Wednesday, April 1, 2009

நான் கடவுள்

அண்மையில் நான் கடவுள் படம் பார்த்தேன். இயக்குனர் பாலா தன் சமூக உணர்வை, ஈடுபாட்டை ஒரு மனிதனாய் மிக நல்ல முறையில் இப்படத்தின் மூலமாக தந்துள்ளார்.

அப்பாவி மக்கள் சுயநலத்துக்காக எப்படி சமூகக் கழுகுகளால் புண் படுத்த படுகிறார்கள் என்பது படத்தின் மூலாதாரம். எங்கோ காசியில் வாழும் அஹோரி கதாநாயகன் ஆர்யா கதையின் பின்னலால் தன் ஊருக்கு வந்தாலும் படம் பார்க்கும் வரை படத்தில் ஈர்ப்பு நன்றாக உள்ளது. விருப்பு வெறுப்புகளை அகற்றி வாழும் ஆர்யா கடவுளாகவே கருதப்படுகிறார்.

உள்ளில் இருப்பது உண்மை என்று உறவுகள் என்ற சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு ஒரு மேம்பட்ட நிலையில் கடவுளாய், மனிதனாய் வருகிறார். துஷ்டர்களை துவம்சம் செய்கிறார்.

ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்காத வினோதமான ஊராய் வேறு எந்த பெரிய மனிதர்களும் இல்லாத கிராமமாய் மலைக்கோவில் வந்தாலும் கதை சில நாட்களே நடக்கிறது என்ற பட்சத்தில் நாம் அதை கேட்க வேண்டாம்.

சிவபெருமான் போல சாம்பலை அள்ளி உடம்பில் பூசி அகம் புறம் கிடையான் என்று ஓர் வாழ்க்கை வாழும் அஹோரியாய் ஆர்யா நடிப்பில் மின்னுகிறார்.

பூஜா ஒரு குருடியாய் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். கதா பாத்திரங்களுக்கு ஏற்ப பொருத்தமான மேக்கப். நல்ல பாத்திரங்களுடன் கதையும் மிக நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.

அங்க ஹீனங்களுடன் உள்ள எத்தனையோ உயிர்களின் அவலங்களை காணும் போது மனம் கவலை படுகிறது. ஆனால் அவர்களின் உலகிலும் கேலியும் கூத்துமாய் ஓர் மகிழ்வு இருக்கிறது என்று இயக்குனர் ஒரேயடியாய் கவலையில் மூழ்காமல் சந்தோசத்தை கலந்து தந்தது நல்ல பாங்கு.

படப்பிடிப்பில் ஆர்தர் வில்சன், படத்தின் கலை அமைப்பு, மிக மிக முக்கியமாய் இசை ஞானி இளையராஜா இசை இந்த படத்தின் சக்தியை கூட்டுகிறது .

நான் கடவுள் அப்படியே இந்தியா முழுதும் செல்ல மாட்டாரா என்ற உணர்வு ஏற்படுகிறது.

முகில்