Tuesday, January 26, 2010

வாழ்த்துக்கள்! நற்பணி தொடரட்டும் பாலா...

இயக்குனராக வேண்டும் என்ற கனவு எத்தனையோ பேருக்கு உள்ளது. நான் நடிக்கத்தான் வந்தேன் ஆனால் இயக்குநராகி விட்டேன் என்று எத்தனையோ பேர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். இயக்குனராகிவிட்டாலும் கூட நல்ல கருத்துக்கள், சமுதாய அக்கறை உள்ள கதைகள், உணர்வு பூர்வமான அணுகுமுறை, கதை சொல்லும் பாங்கு போன்ற உயர்ந்த குணாதிசயங்கள் எல்லா இயக்குனர்களுக்கும் வந்துவிடுவதில்லை. நான் சேதுவில் சில காட்சிகளை பார்க்கும் போதே நினைத்தேன் நன்றாக முயன்றிருக்கிறார்கள் என்று. அப்போது இயக்குனர் யார் என்று நான் கேட்கவில்லை ஆனால் பாலா என்ற பெயர் மனதில் தங்கி இருந்தது. அண்மையில் நான் கடவுள் பார்த்த போது அதைப் பற்றி பாராட்டி ஒரு சிறு கருத்துப் பரிமாற்றம் பதிவு செய்திருந்தேன். அதில் கையாளப் பட்டிருக்கிற விஷயங்களை பாராடியிருந்தேன். இன்று பாலா ஒரு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்ற போது மிக்க மகிழ்வடைகிறேன். நல்ல விஷயங்களை பார்க்கும் சில நல்ல உள்ளங்கள் இன்னும் தேர்வுக் குழுவில் இருப்பது தெரிய வருகிறது. கலை என்பது, மொழி மற்றும் வாழ்விட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நல்ல தேர்வு உறுதி செய்திருக்கிறது. பாலாவின் தேர்வு இன்னும் நல்ல முயற்சிகள் செய்ய வளரும் இளம் உள்ளங்களுக்கு உரமாக அமையும். பாலா இன்னும் நல்ல திரைப்படங்களை உலகிற்குத் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரைப்படக் கலையின் பரிமாணங்களை பாலா மேன்மேலும் ஆராய வேண்டும், புதிய முயற்சிகளை, கருத்துக்களை கையாள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ....

முகில்

Monday, January 11, 2010

ஈரம்


ஈரம் ஒரு வீரமான முயற்சி. புதுமுகங்கள், பழைய கதைக்களம், நவீனம், நல்ல பார்வை இம்முயற்சியை திருவிணையாக்கி உள்ளது. திரைப்படத்தின் ஆணிவேர் நல்ல திரைக்கதை. அதை இதில் ஓரளவு புரிந்து செயல் படுத்திய விதம் விவேகம்!

ஆவிகள் உள்ளது என்பது காலா காலமாய் நாம் கேட்டு பயப்பட்ட விஷயம். ஈரத்தில் உள்ள ஈர்ப்பு ஆவியே! ஷங்கர் தயாரிப்பாளராய் பணம் போடுகிறார் என்றல் சும்மா இல்லியே! ஆவி பணத்தை தரும் என்ற நம்பிக்கைதான்! அறிவழகனின் அறிவழகில் உள்ள ஈரம் பதமாக ஒரு படமாக வந்து பலரையும் பேசவைத்துள்ளது! வாழ்த்துக்கள் டீம்!

கல்லூரிக்காலம், காதல் ஈர்ப்பு, வாழ்க்கை முறை, பண்பாடு, எண்ண முரண்பாடு என்று வாசு-ரம்யா காதல் பிரிய, வாழ்க்கை பாலகிருஷ்ணன் என்ற ஒரு வரனை அறிமுகப்படுத்துகிறது ரம்யாவின் வாழ்வில்! மனரீதியாய் பாலா ஒரு தர நிர்ணய வரைமுறை உள்ளவன் ! அவன் வகுத்த தரம் மாறிவிட்டால் ஏற்றுக்கொள்ள இயலாதவன். எதிலும் களங்கம் இல்லா புதுத்தனம் நாடும் பாலாவிற்கு ரம்யா ஏற்கனவே இன்னொருவனால் காதலிக்கப்பட்டவள் என்ற உண்மை தெரியவர உள்ளூர வெறுப்படைகிறான். ரம்யாவின் மீது வெறுப்படையும் சில காலனிக்காரர்கள் பரப்பிய வதந்தி, ரம்யாவை கொலை செய்ய வைக்கிறது. பாலா கொலை செய்துவிட்டு அதை தற்கொலை என்று உலகை நம்ப வைத்துவிட்டு தான் சாதாரண வாழ்க்கையை அமைத்து கொள்ளும் போது ரம்யாவின் பழைய காதலன் வாசு ஓர் போலீஸ் அதிகாரியாய் வந்து உண்மையை விசாரித்து நடந்தது கொலை என்று நிரூபிக்கிறார்.

அபாண்டமாய் கள்ளக்காதல் பழி சுமத்திக் தன்னைக் கொலை செய்த கணவனையும், அதற்க்கு காரணமான சிலரையும் ரம்யாவின் ஆவி பழி வாங்குகிறது.

திரைக்கதை தண்ணீர் போல் விசையுடன் ஓட நமக்கு அது அழகாக தெரிகின்றது. அறிவழகனின் படகை ஓட்டிச்செல்லும் ஒளி ஓவியர் மனோஜ், கலையாளர், மற்றும் இசை ஓவியர் தமன் தகுந்த பலம் கொடுத்துள்ளது அழகு! நடிப்பில் ஆதி, நந்தா மற்றும் சிந்து மேனன் நல்ல முயற்சி செய்துள்ளனர்! பாத்திரப்படைப்பு என்பது ஒரு எழுத்தாளனின் பார்வை. அவன் ரசித்த சில பாத்திரங்கள் இப்படத்தில் உயிர் பெற்றுள்ளது ரசிக்கும் வகையில்.
நமது வாழ்வில் நாம் நமக்கு வைத்துக்கொள்ளும் வரைமுறைகளை எல்லையாக்கி மற்றோரை அப்படியே எதிர்பார்ப்பது தவறு என்ற ஓர் கருத்தை இப்பாத்திரங்கள் கூறுவதும், நம் வாழ்க்கையில் உள்ள குறைகளை மறைக்கப் பழி போடுவதால் ஏற்படும் துயரத்தையும் இந்தக் கதையின் ஒரு வேர் தாங்குகிறதைப் பார்த்தேன்.

தரமான படைப்பை தர வேண்டும் என்ற உந்துதல் தெரிகிறது. அதை பாராட்ட வேண்டும். சமூகத்தில் நடக்கும் சில விடயங்கள் அப்படியே படமாவதன் மூலம் ஒரு மட்டத்தில் இருந்து பார்க்கும் ஒரு தலைமுறைக்கும் மறு மட்டத்தில் உதிக்கும் இன்னொரு தலைமுறைக்கும் உள்ள இடைவெளி அங்கலாய்ப்பை அளிக்கவும் செய்கிறது. சில காட்சிகள் இளம் வயதினரின் உள்ளங்களை பாதிக்கலாம்.


நிறைவேறாத காதலின் வலியை ஈரம் மென்மையான உணர்வாய், காதலுக்கு இருக்கும் ஒரு மதிப்பாய் வாசுவின் மூலம் கொண்டு வந்து தன் காதலி களங்கமற்றவள் என்று வாசுவை உணர வைத்ததை அவன் வாயால் மதிப்புடன் சொல்லி இருக்கலாம். ஈரம் இல்லாத காதலன் போல் வாசு ரம்யாவின் காதலை தூக்கி எறிந்ததும், அவள் இறந்த பின்னும் பத்திரிக்கை செய்தியை காண்பித்து ரம்யாவின் ஆவியிடம் 'இப்ப என்ன பெயர் கிடைச்சிருக்கு தெரியுமா என்று கேட்டு "கள்ளக்காதல்" என்று போலீஸ் தனமாக கேட்பதும் வாசுவின் பாத்திரப்படைப்பில் ஒரு பலஹீனம் போல் தெரிந்தது. வாசு சில நல்ல வார்த்தைகளை கூறி தனியே நடந்து போவது போல் படத்தின் கடைசி காட்சி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாசு அப்படி போக, மறு புறம் சிகப்பு குடை, கசியும் பெட்ரோல்... என்று தொடரும் குரோதம்...

சினிமாத் தனம் என்று சொல்லக்கூடிய விஷயங்களாய் சில வசனங்கள், காட்சிகள் என்று ஆங்காங்கே தெரிந்தாலும் கதையின் மூலம் சொல்ல விரும்பிய உணர்வு, நல்ல முயற்சியுடன் வெளிவந்துள்ளது. அது எதிர்பார்க்கப்பட்ட விடையை அளிக்கிறது. பார்ப்பது சினிமா என்ற உணர்வின் மேல் நம்மை உட்கார வைத்து கூட்டி சென்று இப்பயணம் ஒரு பயம் தரும் பாத்திரங்கள் அடங்கியது என்று சொல்லும் இந்த குழுவின் முயற்சி நன்று!
ஈரத்தின் தீரத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்!
முகில்